இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற 65வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வைப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஹென்றிச் க்ளாஸென் சதமடித்து 104 (51) ரன்கள் குவித்த அதிரடியில் 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு 172 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 100 (63) ரன்களும் டு பிளேஸிஸ் 71 (47) ரன்களும் எடுத்து 19.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
குறிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஏற்கனவே சாதனை படைத்து சர்வதேச அளவிலும் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறி வந்தார்.
செல்பிஷ் போதுமா:
அதனால் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்த அவர் மனம் தளராமல் போராடி கடந்த 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து கடந்த 8 மாதங்களுக்குள் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை பதிவு செய்து முழுமையான ஃபார்முக்கு திரும்பினார். அதே போல கடந்த ஐபிஎல் தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த அவர் நேற்றைய போட்டியில் ஒருவழியாக 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக சதமடித்து அந்த சோதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அப்படி ஃபார்முக்கு திரும்பி இந்த சீசனில் ஆரம்பம் முதலே 80, 40, 70 போன்ற ரன்களை அடித்து வெற்றிகளில் பங்காற்றிய விராட் கோலி லக்னோவுக்கு எதிரான போட்டியில் முதல் 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த 19 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்து இறுதியில் 61 (44) ரன்களில் அவுட்டான அவர் 50 ரன்களை தொட வேண்டும் என்பதற்காக சுயநலத்துடன் மெதுவாக விளையாடியதாக முன்னாள் வீரர் சைமன் டௌல் நேரலையில் விமர்சித்தார்.
குறிப்பாக அணியின் நலனை தாண்டி சொந்த சாதனைக்காக விராட் கோலி விளையாடுவதாக அவர் தெரிவித்தது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது. ஏனெனில் பொதுவாகவே ஆரம்பத்தில் நிதானமாகவும் நங்கூரமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி எவ்வளவு பெரிய இலக்கையும் சேசிங் செய்யும் ஸ்டைலை கொண்ட விராட் கோலியை சேஸ் மாஸ்டர் என்று அனைவரும் அழைக்கின்றனர். அப்படி அவருடைய திறமையை உணராமல் பாபர் அசாமை விமர்சித்தது போல் பேசாதீர்கள் என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
அத்துடன் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி 40 ரன்களை விரைவாகத் தொடும் விராட் கோலி அதன் பின் மெதுவாக விளையாடி 50 ரன்கள் தொடுவதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் அந்த சமயத்தில் விமர்சித்திருந்தார்.
இருப்பினும் அதற்காக கோபப்படாமல் அணியின் நலனுக்காக விளையாடுவதாக பதிலளித்த விராட் கோலி நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் விளையாடி 94 ரன்களில் இருந்த போது தரமான புவனேஸ்வர் குமார் வீசிய 18வது ஓவரின் 5வது பந்தில் அட்டகாசமான சிக்சரை பறக்க விட்டு சதத்தை தொட்டு அணியின் நலனுக்காக பினிஷர்கள் வந்து அதிரடியாக விளையாடட்டும் என்ற நோக்கத்தில் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
A magnificent CENTURY by Virat Kohli 🔥🔥
Take a bow, King Kohli!
His SIXTH century in the IPL.#TATAIPL #SRHvRCB pic.twitter.com/gd39A6tp5d
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
இதையும் படிங்க:RCB vs SRH : நல்ல ஸ்டார்ட் கிடைக்கும்னு நெனச்சேன். ஆனா இப்படி நடக்கும்னு நினைக்கல – ஆட்டநாயகன் விராட் கோலி மகிழ்ச்சி
மொத்தத்தில் எப்போதுமே நான் சாதனைகளுக்காக விளையாடுவதில்லை என்பதை இப்போட்டியில் மனசாட்சின்றி விமர்சித்த முன்னாள் வீரர்களுக்கு “இந்த செல்பிஷ் போதுமா” என்ற வகையில் பேட்டால் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் வெளியில் இருப்பவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்படாமல் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடுவதாக தம்முடைய ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி விமர்சிப்பவர்களுக்கு விராட் கோலி போட்டியின் முடிவில் நேரடியாகவே பதிலடி கொடுத்தார்.