ஜேக்ஸ் 16 ஓவரில் முடிச்சுட்டாரு.. என்னோட ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி பேசுறவங்களுக்காக இதான் பதில்.. கோலி பேட்டி

Virat Kohli 77
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 45வது லீக் போட்டியில் குஜராத்தை 9 விக்கெட் வித்யாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 84*, ஷாருக்கான் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் டு பிளேசிஸ் 24, விராட் கோலி 70*, வில் ஜேக்ஸ் சதமடித்து 100* ரன்கள் விளாசி 16 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக விராட் கோலிக்கு பின் களமிறங்கிய வில் ஜாக்ஸ் அவரை விட சரவெடியாக விளையாடி ரசித் கானுக்கு எதிராக 6, 6, 4, 6, 6 என ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

கிங் கோலியின் பதிலடி:
அதனால் 3வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் 19 ஓவரில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியை வில் ஜேக்ஸ் 16 ஓவரிலேயே முடித்தது நம்ப முடியாததாக அமைந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி பேசுபவர்களுக்காக விளையாடவில்லை என்று தெரிவிக்கும் விராட் கோலி அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் மட்டுமே விளையாடுவதாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வில் ஜேக்ஸ் ஆரம்பத்தில் விரும்பிய வகையில் அதிரடியாக விளையாட முடியாததால் கடுப்பானார். அப்போது நாங்கள் கொஞ்சம் கலந்துரையாடினோம். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர் அதிரடியாக விளையாடினார். அவரால் எந்தளவுக்கு அதிரடியாக விளையாட முடியும் என்பது எங்களுக்கு தெரியும்”

- Advertisement -

“குறிப்பாக மோகித் சர்மாவுக்கு எதிராக ஒரே ஓவரில் அவர் பெரிய ரன்கள் குவித்ததும் என்னுடைய வேலை மாறிவிட்டது. அவருடைய அதிரடியை நான் எதிர்ப்புறம் பார்த்ததில் மகிழ்ச்சி. இப்போட்டியை நாங்கள் 19 ஓவரில் முடிப்போம் என்று நினைத்தேன். ஆனால் 16 ஓவரிலேயே முடித்தது அற்புதமான முயற்சி. வில் ஜேக்ஸ் சிறந்த டி20 சதங்களில் ஒன்றை அடித்தார். அதை நான் எதிர்ப்புறம் இருந்து பார்த்ததில் மகிழ்ச்சி”

“என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்த வரை அணிக்காக போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதைத்தான் நீங்கள் 15 வருடங்களாக செய்து வருகிறீர்கள். நீங்கள் அந்த சூழ்நிலையில் இருந்திருக்கவில்லை என்றால் வெளியே அமர்ந்து கொண்டு விளையாட்டை பற்றி பேசுவது என்ன என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை”

இதையும் படிங்க: 6, 6, 4, 6, 6.. ரசித் கானை பொளந்த ஜேக்ஸ்.. கிங் கோலி க்ளாஸ்.. 14 வருடத்திற்கு பின் ஆர்சிபி அபார வெற்றி

“மக்கள் தங்களுடைய அனுமானங்களை தினந்தோறும் பேசலாம். ஆனால் எங்களைப் போல விளையாடியவர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். கடந்த 2 போட்டிகளைப் போல் நாங்கள் ஆரம்பத்தில் விளையாடவில்லை. இருப்பினும் தற்போது விளையாடுவது போல் நாங்கள் தொடர விரும்புகிறோம். நாங்கள் நமக்காக முன்னேற விரும்பி சுயமரியாதைக்காக விளையாடுகிறோம். நாங்கள் எங்களுக்காகவும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறோம்” என்று கூறினார்.

Advertisement