ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடி முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்து இந்த தொடரினை தோல்வியுடன் துவங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.
ரஹானே செய்த தவறுதான் தோல்விக்கு காரணம் : சுரேஷ் ரெய்னா
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 16.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி தோல்வியை சந்திக்க மிடில் ஆடரில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த போட்டியின் முதல் 10 ஓவர்களில் அந்த அணி 107 ரன்களை குவித்த அந்த அணி அடுத்த 10 ஓவர்களில் வெறும் 67 ரன்களை மட்டுமே குவித்தது. இப்படி மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களின் அடுத்தடுத்த சரிவே கே.கே.ஆர் அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரஹானே கேப்டனாக செய்த சில தவறுகள் தான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்ற ஒரு புதிய கருத்தை முன்னாள் சி.எஸ்.கே வீரரான சுரேஷ் ரெய்னா முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நேற்று ரஹானே கேப்டனாக சில முடிவுகளை ஸ்மார்ட்டாக எடுத்திருக்க வேண்டும். அதாவது ரகானே நேற்று பந்துவீச்சின் போது ஹர்ஷித் ராணாவையும், சுனில் நரேனையும் முன்கூட்டியே கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் சுனில் நரேன் விராட் கோலியை நான்கு முறை ஐபிஎல் தொடரில் வீழ்த்தி இருக்கிறார்.
அதேபோன்று ஹர்ஷித் ராணா பவுன்சிற்க்கு சாதகமான இந்த மைதானத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். எனவே ஒரு கேப்டனாக பந்து வீச்சாளர்களை அவர் சரியான இடத்தில் பயன்படுத்தாததே தோல்விக்கு காரணமாக மாறியது. இதன் மூலம் கேப்டன்சி பற்றி இன்னும் கொஞ்சம் அவர் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க : மோசமான ஷாட்.. ரசிகர்களும் ரிங்கு சிங் இப்படி அவுட் ஆவதை தான் விரும்புகிறார்கள் – சேவாக் விளாசல்
அவர் கூறியது போன்றே கொல்கத்தா மைதானம் பவுன்சிற்கு சாதகமான மைதானம் என்பதனால் ஹர்ஷித் ராணாவை முன்கூட்டியே கொண்டு வந்திருக்கலாம். அதேபோன்று வருண் சக்கரவர்த்திக்கு முன்பாக பவர் பிளேவில் சுனில் நரேனை கொண்டு வந்திருக்கலாம் என்பதும் பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



