இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி இரவு தனது ஓய்வு அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் மூலம் மிக எளிமையாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியது மட்டுமின்றி அவரது நினைவுகளையும் பகிர ஆரம்பித்து அவருக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தோனியின் ஓய்வு முடிவினை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தோனி உடனான தனது அனுபவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு அதே ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தோனியிடம் பேசினேன். அந்த சந்திப்பில் இந்த உலகை விட்டு எனது உயிர் பிரிய சில நேரங்களில் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தால் என்ன செய்வேன் தெரியுமா ?
இந்தியா உலகக் கோப்பையை வெல்ல நீங்கள் அடித்த அந்த சிக்ஸரை போட்டுக் காட்டும் படி எனக்கு பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்வேன். அதை பார்த்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சியுடன் உலகிற்கு குட் பாய் சொல்லிடுவேன் என தோனியிடம் சொன்னேன்.
அதை அமைதியாக கேட்டு விட்டு தோனி சிரித்தார் என்று அவர் தெரிவித்துள்ளார் மேலும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டிலும் தோனி இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.