IPL 2023 : நல்ல ஃபார்மில் இருக்கும் அவர இப்போவே இந்திய அணியில் யூஸ் பண்ணிருங்க – இளம் வீரரை ஆதரிக்கும் கவாஸ்கர்

Sunil-gavaskar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை கண்டறிந்து கொடுத்து வரும் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் நிறைய இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது அணிக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நாட்டுக்காக விளையாடும் முனைப்புடன் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக விளையாடும் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் 620 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற ஷான் மார்ஷ் 15 வருட வரலாற்றுச் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Jaiswal

பானி பூரி விற்பவரின் மகனாக ஏழைக் குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் நண்பர்களின் உதவியுடன் உள்ளூரில் விளையாடத் துவங்கி தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியாவை ஏற்கனவே ஃபைனல் வரை அழைத்துச் சென்ற பெருமையைக் கொண்ட அவர் சமீப காலங்களாகவே சயீத் முஷ்டாக், விஜய் ஹசாரே, ரஞ்சி போன்ற டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான உள்ளூர் கிரிக்கெட்டிலும் சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

யூஸ் பண்ணிருங்க:
அதன் உச்சகட்டமாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணியில் மிரட்டிய அவர் வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் இதர வீரர்கள் தினறிய போது தனி ஒருவனாக 124 (62) ரன்கள் விளாசி சதமடித்தார். அதை விட கொல்கத்தாவுக்கு எதிராக முதல் ஓவரில் வரலாற்றில் உச்சகட்டமாக 26 ரன்களை அடித்து 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அதிவேக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் மொத்தமாக இந்த சீசனில் 620 குவித்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

Yashasvi Jaiswal 2

அதனால் அவர் இந்தியாவுக்காக விரைவில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் அறிமுகமாக விளையாட வேண்டும் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் திறமையை வீணடிக்காமல் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு கொடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் 20 – 25 பந்துகளில் 40 – 50 ரன்கள் அடித்தால் தன்னுடைய அணிக்காக சிறப்பாக செயல்படுகிறார் என்று அர்த்தமாகும். அதிலும் அவர் உங்களுடைய தொடக்க வீரராக இருந்தால் 15 ஓவர்கள் வரை விளையாடுவதை விரும்புவீர்கள். அதே வேகத்தில் சதமும் அடித்தால் உங்களுடைய அணி எளிதாக 190 – 200 ரன்களை தொட்டு விடும். அந்த விதத்தில் தான் இந்த சீசனில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. டெக்னிக்கல் அளவிலும் அவர் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்”

Gavaskar

“அதனால் இந்தியாவுக்காக விளையாட தயாராக உள்ளார் என்று நான் நினைக்கிறேன். அதனால் அவருக்கு இப்போதே நாம் வாய்ப்பு கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக ஒரு வீரர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் போது வாய்ப்பு கொடுத்தால் அதுவே ராக்கெட் வேகத்தில் செயல்படும் தன்னம்பிக்கையை கொடுக்கும். குறிப்பாக சர்வதேச அளவில் அறிமுகமாகும் போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் தயாராக இருக்கிறேனா? என்ற சந்தேகம் சில வீரர்களிடம் வரும். அதனால் அறிமுகமாகும் போது உங்களுடைய ஃபார்ம் சரியாக இல்லையெனில் சந்தேகம் மேலும் அதிகரிக்கும். எனவே இந்தியாவுக்காக அறிமுகமாகும் போது நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:CSK vs DC : டெல்லி அணிக்கு எதிரா பேட்ஸ்மேன்கள் எங்க வேலையை ஈஸி ஆக்கிட்டாங்க – தீபக் சாஹர் பேட்டி

அதாவது தாமதமாக வாய்ப்பு கொடுத்தால் நல்ல ஃபார்மில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வீரர்களுக்கு வரும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் போன்ற வீரருக்கு அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கொடுத்தால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் சிறப்பாக செயல்பட துவங்குவார் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement