ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 58 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. எனவே தற்காலிகமாக ஒரு வாரம் வரை ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒரு வாரம் கழித்த பின் நிலைமைகளை ஆராய்ந்து மீண்டும் ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் தாம் பிசிசிஐ தலைவராக இருந்த போது லாக் டவுன் வந்ததால் 2020, 2021 ஆகிய 2 ஐபிஎல் தொடர்களில் அடுத்தடுத்த பிரச்சனை உருவானதாக கங்குலி கூறியுள்ளார்.
ஈஸியாக முடித்த பிசிசிஐ:
ஆனால் அதையும் தாண்டி அந்த 2 ஐபிஎல் தொடர்களையும் பிசிசிஐ எளிதாக துபாயில் வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக கங்குலி கூறியுள்ளார். எனவே தற்போதைய சூழ்நிலைகளை எளிதாகக் கடந்து 2025 ஐபிஎல் தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“2020, 2021 ஐபிஎல் தொடர்களிலும் நிறைய பிரச்சனைகள் இருந்தது. அதையும் தாண்டி ஐபிஎல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அந்த வகையில் ஐபிஎல் தொடரை நடத்தி முடிப்பதில் பிசிசிஐ மிகவும் திறமை வாய்ந்தது. எனவே பிசிசிஐ கண்டிப்பாக ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்கும். இது 7 நாட்கள் கொண்ட இடைவெளியாகும்”
கங்குலி நம்பிக்கை:
“தேவைப்பட்டால் 7 நாட்களை அதிகமாக எடுத்துக்கொண்டு ஐபிஎல் தொடரை நடத்தலாம். லாக் டவுன் போன்ற சூழ்நிலைகள் மீண்டும் நடைபெறாது. ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்திய அரசாங்கத்தின் வழி காட்டுதல்களுடன் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது. அதே போல இம்முறையும் பிசிசிஐ சூழ்நிலைக்குத் தகுந்தார் போல செயல்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவால் முடியாததை நாங்கள் செய்து ஆஸியை வீழ்த்தி கோப்பையை வெல்வோம் – தெ.ஆ வீரர் சவால்
இந்த சூழ்நிலையில் பதற்றம் தொடர்ந்து நிலவும் பட்சத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை துபாயில் பிசிசிஐ நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. இல்லையெனில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலேயே நடத்துவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.