நான் இந்த வேர்லடுகப்பை சரியா ஸ்டார்ட் பண்ணல.. ஆனா கேப்டன் என்கிட்ட சொன்னது இதுமட்டும் தான் – ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது பத்தாவது வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமின்றி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி தனது 50-ஆவது ஒருநாள் சதத்தை அடித்து இருந்தாலும் நான்காவது வீரராக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் அவருக்கு இணையாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக அணியின் எண்ணிக்கையை விரைவாக உயர்த்திய அவர் 70 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 8 மெகா சிக்ஸர்கள் என 105 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : இந்த போட்டியில் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே எங்களுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்ததால் பின்னால் வந்த எங்களால் போட்டியை அப்படியே அவர் விட்ட இடத்தில் இருந்து அதிரடியாக கொண்டு செல்ல முடிந்தது.

- Advertisement -

ரோகித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன் அவரது ஆட்டம் இந்த தொடரில் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதோடு அவர் கொடுக்கும் நம்பிக்கையும் எங்களை திறம்பட செயல்பட வைக்கிறது. இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் டீம் மேனேஜ்மென்ட் என அனைவருமே என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த உலகக்கோப்பை தொடரை நான் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் பேசிய ரோஹித் : நீ வெளியில் இருந்து வரும் கருத்துகளை பற்றி எதையும் நினைக்க வேண்டாம்.

இதையும் படிங்க : 67 பந்தில் சதம்.. கில்கிறிஸ்டின் மாஸ் சாதனையை உடைத்த ஸ்ரேயாஸ் புதிய உலக சாதனை

நாங்கள் உன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். நீ மைதானத்திற்கு சென்று உன்னுடைய திறமையை வெளிப்படுத்தினால் போதும் என்று என்னை ஆதரித்தார்கள். அதன் காரணமாகவே நான் அடுத்தடுத்த போட்டிகளில் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு என்னுடைய ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறேன். தற்போதுள்ள இந்திய அணியில் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருக்கிறது. நமது அணியின் தற்போது அனைவருமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement