நேரலையில் சஞ்சய் மஞ்ரேக்கர் கெஞ்சிக் கேட்டும்.. பாண்டியாவுக்கு நேர்ந்த மெகா அவமானம்.. நடந்தது என்ன?

Sanjay Manjrekar
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் சுமாராக விளையாடி 125/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 32, கேப்டன் பாண்டியா 34 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, சஹால் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 126 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ரியன் பராக் 54* (39), அஸ்வின் 16 ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் ஆகாஷ் மாத்வால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தும் அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

கெஞ்சி கேட்ட மஞ்ரேக்கர்:
அதனால் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3வது தோல்விகளை பதிவு செய்துள்ள மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அத்துடன் இந்த சீசனில் பெங்களூரு அணிக்கு பின் தங்களுடைய சொந்த ஊரில் தோல்வியை பதிவு செய்த 2வது அணி என்ற பரிதாபத்தையும் மும்பை சந்தித்தது.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை இந்த வருடம் கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அப்போதிலிருந்தே அதற்கு மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அகமதாபாத் மைதானத்தில் மொத்த ரசிகர்களும் சேர்ந்து பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் இந்த சீசனில் முதல் முறையாக இப்போட்டியில் தங்களுடைய சொந்த ஊரில் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பாண்டியா தலைமையிலான மும்பை அணி களமிறங்கியது. ஆனால் அங்கேயும் ஆரம்பம் முதலே தங்களுடைய கேப்டனான பாண்டியாவுக்கு எதிராக மும்பை ரசிகர்கள் கூச்சலிட்டு சொந்த மண்ணில் எதிர்ப்பு தெரிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக டாஸ் வீசுவதற்காக வந்த பாண்டியாவுக்கு எதிராக மொத்த ரசிகர்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 3க்கு 3.. ராஜஸ்தானுக்காக அசத்திய ரியன் பராக்.. ஆர்சிபி’யுடன் இணைந்த மும்பை.. பாண்டியா பரிதாப சாதனை

அதனால் தொகுப்பாளராக நின்ற முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் அதிருப்தியடைந்து பேசியது பின்வருமாறு. “என்னுடன் 2 கேப்டன்கள் இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் கேப்டன். லேடிஸ் மட்டும் ஜென்டில்மேன் அவருக்கு பெரிய கைதட்டல்களை கொடுங்கள். (மரியாதையுடன்) நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதாவது பாண்டியாவுக்கு ஆதரவு கொடுக்குமாறு அவர் ரசிகர்களிடம் கெஞ்சாத குறையாக கேட்டார். ஆனால் அதையெல்லாம் ஏற்காத ரசிகர்கள் மீண்டும் பெரிய கூச்சலிட்டு பாண்டியாவை அவமானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement