இந்தியாவில் அடுத்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 16-ஆவது ஐ.பி.எல் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த ஐ.பி.எல் தொடருக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்துகொண்ட 10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.
இந்த மினி ஏலத்தில் வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் பல கோடிகளுக்கு சென்றனர். குறிப்பாக சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன் போன்றோர் அதிகவிலைக்கு ஏலம் போகி அசரவைத்தனர். அதேவேளையில் இந்தியாவை சேர்ந்த சில வீரர்கள் அடிப்படை விலைக்கு கூட ஏலம் போகாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் 29 வயதே ஆன இந்திய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ஏலத்தில் போகவில்லை. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமாகிய இவர் இதுவரை 100 போட்டிகளுக்கும் மேல் விளையாடியும் இவரை எந்தவொரு அணியும் அடிப்படை விலைக்கு கூட தேர்வு செய்யாதது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் பந்துவீச்சில் மிரட்டக்கூடிய இவர் ஐ.பி.எல் வரலாற்றில் 7 முறை விராட் கோலியை வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை பும்ராவிற்கு இணையாக இவரது செயல்பாடுகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க : கொஞ்சம் இல்லனா என்னோட காலே போயிருக்கும். மோசமான விபத்து குறித்து – மேக்ஸ்வெல் பகிர்ந்த தகவல்
இப்படிப்பட்ட மகத்தான ஒரு வீரர் ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாதது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு எந்தவொரு அணியும் என்னை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாதது தனது மனதை நொறுக்கியுள்ளது என்று சந்தீப் சர்மாவும் தனது வருத்தத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.