கோலியை விடுங்க.. ஆஹா ஓஹோன்னு பேசுன அவரு என்ன பண்ணாருன்னு புரியல – சல்மான் பட் விளாசல்

Butt
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 13-வது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களின் முடிவில் 240 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அதனை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது 43 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோர் அரைசதம் கடந்தாலும் பின் வரிசையில் அதிரடியாக விளையாட வேண்டிய சூரியகுமார் யாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்ததாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் என்ன முயற்சி செய்தார்? என்பது எனக்கு புரியவில்லை. பின்வரிசை வீரர்களோடு விளையாடும் போது அவர்தான் ஸ்ட்ரைக் செய்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவர் தவறான ஷாட்டுகளை விளையாடியது மட்டுமின்றி கடைசி கட்டத்தில் சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : நம்பிக்கை இல்லைனா ஏன் அவர செலக்ட் பண்ணீங்க? இந்திய அணியை விமர்சித்த கம்பீர், வாசிம் அக்ரம்

அந்த நேரத்தில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடியிருந்தால் அது இந்திய அணிக்கு பலன் அளித்திருக்கும். விராட் கோலி துரதிஷ்டவசமானவர். அவருடைய பேட்டிங் சிறப்பாக இருந்தும் இந்திய அணியை கரை சேர்க்க முடியவில்லை. உண்மையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அவர்கள் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதே எனது கருத்து என சல்மான் பட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement