இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து 349 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்க அதனை எதிர்த்து விளையாடிய நியூசிலாந்து அணியானது 337 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டது ஆரம்பத்திலேயே பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது. ஏனெனில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷனை துவக்க வீரராக களமிறக்கி இருக்கலாம் என்று பலரும் கூறினர்.
ஆனால் ரோகித் சர்மாவோ சுப்மன் கில் தான் துவக்க வீரருக்கான போட்டியில் முதலில் உள்ளார் நிச்சயம் அவர்தான் விளையாடுவார் என்று இலங்கை தொடரில் விளையாட வைத்தார். அந்த இலங்கை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் சதம் அடிக்கும் அசத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது நேற்று நடைபெற்ற இந்த நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்து தனது தேர்வு சரியானதுதான் என்று அவர் விமர்சகர்களுக்கு நிரூபித்தார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 149 பந்துகளை சந்தித்த அவர் 19 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 208 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சுப்மன் கில்லை துவக்க வீரராக களமிறக்க என்ன காரணம் என்பது குறித்து பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது பார்ம் காரணமாகவே அவரை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்த நினைத்தோம்.
இதையும் படிங்க : வீடியோ : என்னாங்க பெரிய ரஷீத் கான், 7வது இடத்தில் களமிறங்கி ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி பழி வாங்கிய தெ.ஆ இளம் வீரர்
அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கூட அவர்தான் துவக்க வீரராக விளையாடினார். துவக்க வீரராக அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் இதன் காரணமாகத்தான் இஷான் கிஷனை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில்லுக்கு வாய்ப்பளித்ததாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.