ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வீரர்களை வாங்குவதற்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் கார்ட் பயன்படுத்தி வாங்க முடியும்.
இது போன்ற சூழ்நிலையில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவை தக்க வைக்குமா என்ற கேள்வி காணப்படுகிறது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடம் கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதனால் மதிக்காத மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேற வேண்டும் என்று ஏற்கனவே ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.
ஆர்சிபியில் ரோஹித் சர்மா:
இந்நிலையில் ரோஹித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா கடைசி வரை கேப்டனாகவே விளையாடக்கூடிய தகுதியுடையவர் என்று கைப் தெரிவித்துள்ளார். அப்படி ரோகித் சர்மா வெளியேறினால் அவரை பெங்களூரு அணி வாங்க வேண்டும் என்றும் கைப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அங்கே சிறந்த அணியை கட்டமைத்து ஆர்சிபி முதல் கோப்பையை வெல்வதற்கு ரோகித் சர்மா உதவுவார் என்றும் கைஃப் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா கேப்டனாக மட்டுமே விளையாட வேண்டும். மிகப்பெரிய வீரரான அவர் சமீபத்தில் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வென்றார்”
மும்பைக்கு டாட்டா சொல்லுங்க:
“அதனால் அவருக்கு பலரும் சலுகைகளை வழங்குவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரோகித் சர்மா தமக்கு கேப்டன்ஷிப் கொடுக்கும் அணியை பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதற்காக மும்பையிலிருந்து ரோஹித் வெளியேற வேண்டும். ஐபிஎல் தொடரில் இன்னும் 2 – 3 வருடம் கேரியரை கொண்டுள்ள அவர் அதை கேப்டனாகவே செலவிட வேண்டும்”
இதையும் படிங்க: அவர் ஒருத்தர மட்டும் வச்சிக்கிட்டு மத்த எல்லாரையும் ஏலத்தில் விடுங்க.. ஆர்.சி.பி அணிக்கு – ஆர்.பி.சிங் யோசனை
“ஏனெனில் களத்தில் அவர் செய்யக்கூடிய திறமை சிலருக்கு மட்டுமே இருக்கும். அந்த நேரத்தில் ஆர்சிபி வாய்ப்பு எடுத்து அவரை வாங்கி கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்க சம்மதிக்க வைக்க வேண்டும். ரோஹித் சர்மாவுக்கு பிளேயிங் லெவன் எப்படி உருவாக்க வேண்டும் என்பது தெரியும். அவருடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆர்.சி.பி தங்களுடைய கோப்பையை வெல்லாத கதையை அடுத்த வருடம் முடிக்கலாம்” என்று கூறினார்.



