
பாகிஸ்தானில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி பெரும்பாலும் இலங்கையில் 2023 ஆசிய கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள், வங்கதேசம் ஆகிய டாப் 6 அணிகள் விளையாட உள்ளன. அதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா இம்முறை 8வது கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையில் 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து விரைவில் இலங்கைக்கு பறக்கும் இந்திய அணியினர் செப்டம்பர் 2ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக வலைப்பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த தொடரிலும் சரி அடுத்ததாக நடைபெறும் உலகக் கோப்பையிலும் சரி இந்தியா வெற்றி வாகை சூடுவதற்கு பேட்டிங் துறையின் முதுகெலுமாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.
சச்சினின் சாதனை:
அதிலும் குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்ல துவக்கத்தை கொடுத்தால் தான் பெரிய ஸ்கோர் குவித்து அல்லது சேசிங் செய்வதற்கு நல்ல அடித்தளம் அமைத்து இந்தியாவால் வெற்றி காண முடியும். இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்காத கதைகளுக்கு கடந்த ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ரோஹித் சர்மா ஹிட்மேன் என்ற தன்னுடைய பட்டப்பெயருக்கேற்றார் போல் அதிரடி காட்டாமல் சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறார்.
குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரிலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அவர் தடுமாற்றமாக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சதமடித்து ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி அவர் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து அபாரமாக செயல்பட்டு வெற்றிக்கு போராடியதை போல் இந்த ஆசிய கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முழுமையான ஃபார்முக்கு திரும்பினால் தான் 2023 உலக கோப்பையை சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைக்க முடியும் என்றே சொல்லலாம்.
இந்த நிலைமையில் கடந்த 2008 முதல் இதுவரை விளையாடிய 21 இன்னிங்ஸில் 3 சதங்கள் 3 அரை சதங்கள் உட்பட 745 ரன்களை 46.56 என்ற சராசரியில் குவித்துள்ள ரோகித் சர்மா 50 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். எனவே இந்த தொடரில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாட முடியும் என்ற நிலைமையில் அதில் 227 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பார்.
இதையும் படிங்க:
இதற்கு முன் 1990 – 2012 வரையிலான காலகட்டங்களில் 21 இன்னிங்ஸில் 7 அரை சதங்கள் 2 சதங்கள் உட்பட 971 ரன்களை 51.10 என்ற சராசரியில் குவித்துள்ள சச்சின் ஆசியக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். 3வது இடத்தில் எம்எஸ் தோனி 648 ரன்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.