சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது உலக நாடுகள் முடங்கி கிடைக்கும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்திலும் இந்த ஊரடங்கு தற்போது ஐந்தாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் தேவை இல்லாத காரணத்தினால் வெளியே வரும் நபர்களை சென்னை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை திருவான்மியூர் சந்திப்பில் கடந்த 20ஆம் தேதி பொது குழு முடக்கம் காரணமாக போக்குவரத்து துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆல் ரவுண்டர் ராபின் சிங் தனது காரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்துள்ளார். அவரை மடக்கிய சென்னை திருவான்மியூர் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் என்பவர் இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு ராபின் சிங் ஆங்கிலத்தில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
அவரின் அந்த பதில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அந்த ஆய்வாளருக்கும் ராபின் சிங்குக்கும் இடையே மொழி புரிதலில் சற்று முரண்பாடுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இ-பாஸ் இல்லாததால் அவரது காரை பறிமுதல் செய்த போலீசார் பொதுமுடக்க நேரத்தில் காரில் தேவையின்றி வந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு நேரத்தில் தற்போது வாகனத்தில் தேவையின்றி சுற்றித் திரிந்ததால் அவருக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் தற்போது பெசன்ட் நகரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.