நடப்பு ஐபிஎல் தொடரின் 41 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 146 ரன்களை மட்டுமே குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 57 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களும் குவித்தனர்.
பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியானது 19 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததால் இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.
மூன்று ஓவர்கள் வீசிய அவர் 14 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தாலும் அவர் ஏன் மூன்று ஓவர்கள் மட்டும் வீசியிருந்தார் என்று பலரும் தங்களது கேள்விகளை சமூக வலைதளம் மூலமாக எழுப்பி வருகின்றனர். ஏனெனில் நேற்றைய போட்டியின் போது ஸ்ரேயாஸ் அய்யர், இந்திரஜித், சுனில் நரைன் மற்றும் ரசல் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இப்படி அற்புதமாக பந்து வீசியிருந்த அவருக்கு முழுமையாக 4 ஓவர்கள் வீச ரிஷப் பண்ட் ஏன் வாய்ப்பு வழங்கவில்லை? என்ற கேள்வி பெருமளவில் எழுந்தது. 3 ஓவர்கள் மட்டுமே வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த அவர் நான்காவது ஓவரை வீசியிருந்தால் நிச்சயம் அவரால் மேலும் சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க முடியும்.
அப்படிப்பட்ட வேளையில் அவருக்கு ரிஷப் பண்ட் கடைசி ஓவரை வீச வாய்ப்பு வழங்காதது பெரிய கேள்வியாக மாறியுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து அதற்கான விளக்கத்தை அளித்துள்ள டெல்லி அணியின் கேப்டன் பண்ட் கூறுகையில் : நேற்றைய போட்டியின் போது கடைசி சில ஓவர்களில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பந்து ஈரத்தன்மை அடைந்ததால் கடைசி சில ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தினை கிரிப் செய்து வீசுவது கடினம் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : இந்த பார்ம் போதுமா? முரட்டு பார்முக்கு திரும்பி சச்சின், ரோஹித் சாதனையை சமன் செய்த – குல்தீப் யாதவ்
அதன் காரணமாகவே நான் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினால் சரியாக இருக்கும் என்று கடைசி கட்ட ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்தேன். அதனால்தான் குல்தீப் யாதவ்க்கு கடைசிவரை வழங்க முடியாமல் போனது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.