விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் 14 போட்டிகளில் விளையாடி முடிப்பதற்கு முன்பாகவே கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வருடம் அந்த அணியின் எழுச்சிக்கு கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் 2012, 2014 ஆகிய வருடங்களில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த அவர் தற்போது ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அதிரடியான முடிவுகளை எடுத்து கொல்கத்தா வெற்றி நடை போட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக 2014 காலகட்டத்தில் ஓப்பனிங்கில் அசத்திய சுனில் நரைனை இந்த வருடம் மீண்டும் கெளதம் கம்பீர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கியுள்ளார்.
கம்பீர் வருத்தம்:
அதைப் பயன்படுத்தி 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள சுனில் நரைன் கொல்கத்தா வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2012இல் தம்முடைய தலைமையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான சூரியகுமார் யாதவை நாளடைவில் கொல்கத்தா அணி தவற விட்டதற்காக வருந்துவதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சரியான திறமையை கண்டறிந்து உலகிற்கு காண்பிப்பதே தலைவரின் வேலையாகும். எனது ஏழு வருட கொல்கத்தா கேப்டன்ஷிப் பதவியில் ஒரு வருத்தம் என்னவெனில் சூரியகுமார் யாதவை அவரது திறமைக்கேற்றவாறு நாங்கள் பயன்படுத்த முடியவில்லை. அதற்கு மற்ற பேட்ஸ்மேன்களின் சேர்க்கை காரணமாக இருந்தது”
“நீங்கள் 3வது இடத்தில் ஒரு வீரரை மட்டுமே விளையாட முடியும். மேலும் ஒரு கேப்டனாக நீங்கள் அணியில் உள்ள மற்ற 11 வீரர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர் 3வது இடத்தில் திறம்பட செயல்பட்டிருப்பார். அவர் அணியின் வீரர். யார் வேண்டுமானாலும் சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் அணியின் வீரராக இருப்பது மிகவும் கடினமாகும். 6 அல்லது 7வது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தாலும் சரி பெஞ்சில் அமர வைத்தாலும் சரி அவர் எப்போதும் அணிக்காக சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொள்வார்”
இதையும் படிங்க: கடவுள் மாதிரி.. சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்காக சென்னையில் அதை செஞ்சாலும் ஆச்சர்யமில்ல.. புகழ்ந்த ராயுடு
“அதனாலேயே அவரை நாங்கள் துணை கேப்டனாகவும் அறிவித்தோம்” என்று கூறினார். அந்த வகையில் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய சூரியகுமார் யாதவுக்கு மும்பை அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கிய அவர் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். அதனாலேயே கம்பீர் வருந்துவது குறிப்பிடத்தக்கது.