உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது இந்திய அணி. தற்போது அங்கு நடைபெற்ற இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் அதிரடியாக ஆடி சதமடித்திருக்கிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான் ரிஷப் பன்ட். கடந்த இரண்டாம் தேதி இங்கிலாந்திற்கு புறப்பட்டு சென்ற இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்பாக எந்த ஒரு பயிற்சிப் போட்டியும் இல்லாததால், இந்திய வீரர்களே இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இதில் ஒரு அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாகவும் மற்றொரு அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாகவும் செயல்பட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட், இந்த பயிற்சி போட்டியிலும் அந்த நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். 94 பந்துகளை எதிரகொண்ட அவர் 121 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை பிசிசிஐ தனது அதிகாரப் பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், அந்த போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில்லும் அற்புதமான தொடக்கத்தை அளித்துள்ளார். அவர் 135 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். வேகப் பந்து வீச்சைப் பொறுத்தவரை மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய இஷாந்த் சர்மா தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
It’s Day 2 of the intra-squad match simulation.
After @RealShubmanGill got a steady start with 85 off 135 deliveries, @RishabhPant17 found his groove with a 121* off 94 deliveries.@ImIshant leads the pack with 3/36 #TeamIndia pic.twitter.com/YRNsVjweDt
— BCCI (@BCCI) June 12, 2021
ரோஹித் சர்மாவுன் தொடக்க ஆட்டக்காரராக யார் விளையாடப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக அந்த இடத்தை சுப்மன் கில் தன்வசப்படுத்தியருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த இறுதிப் போட்டியில் ரிஷப் பன்ட்டின் ஆட்டம் தான் மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது என்று ஏற்கனவே முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறி வந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்பாக நடந்த பயிற்சிப் போட்டியில் அவர் சதமடித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியானது வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக அந்த அணியானது இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி விட்டு வருவதால் அந்த அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறிய பலரும், தற்போது பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பதை பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.