இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 18 வது ஐபிஎல் தொடரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது இருக்கும் பதற்றமான போர் சூழல் காரணமாக தற்காலிகமாக இந்த ஐபிஎல் தொடரானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த 2025 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த பல அனுபவ வீரர்கள் சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்திய வேளையில் இளம் வீரர்களாக களம் கண்ட பல அணிகளைச் சேர்ந்த அறிமுக வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
2025 ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறந்த கண்டெடுப்பு இவர்தான் : ரிக்கி பாண்டிங்
குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, விப்ராஜ் நிகம், விக்னேஷ் புத்தூர், அஸ்வினி குமார், உர்வில் பட்டேல், அனிகீத் வர்மா என பல்வேறு இளம் வீரர்கள் இந்த தொடரில் களம் கண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த 2025 ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டெடுப்பு என்றால் அது பிரியான்ஷ் ஆர்யா தான் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு பிரப்சிம்ரன் சிங் எங்களது அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதால் அவரது இந்த ஆட்டம் பெரியது கிடையாது. ஆனால் அணிக்குள் புதிதாக இணைந்த பிரியான்ஷ் ஆர்யா இந்தத் தொடரில் நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே தான் அவரை மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறுவேன். ஏனெனில் அவர் விளையாடிய முதல் போட்டிக்கு பின்னர் அவர் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் உறுதியாக நம்பினேன். அதேபோன்று அவர் அதிரடியான சதம் விளாசி திகைக்க வைத்தார். எங்களது அணியில் வலது கை ஆட்டக்காரராக பிரப்சிம்ரன் சிங் இருப்பதும், இடது கை ஆட்டக்காரராக பிரியான்ஷ் ஆர்யா இருப்பதும் எங்கள் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் சரி இவர்களது ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணிக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யா பயமின்றி விளையாடும் விதத்தை பார்க்கையில் நிச்சயம் அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது என்று தான் கருதுவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணி இம்முறை ஐ.பி.எல் தொடரில் சந்தித்த தடுமாற்றத்திற்க்கு அவர்தான் காரணம் – ஹர்பஜன் குற்றச்சாட்டு
24 வயதான டெல்லியை சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் என 194 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 417 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.