ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி கொல்கத்தா அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன்பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி தங்களது முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து அபார துவக்கத்தை பெற்றது. அதன்பிறகு 16வது ஓவரின் முடிவில் 123 ரன்கள் சேர்த்த நிலையில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது.
பின்னர் 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக மிடில் ஆர்டரில் அடுத்த 7 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்கள் விழுந்தது. இதன் காரணமாக இறுதியில் 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலை நேர்ந்தது. இரண்டு பந்துகளே மீதமிருந்த 6 ரன்கள் என்கிறபோது எப்போதுமே பந்துவீச்சு அணிக்கு சாதகமாக இருக்கும். அவ்வேளையில் கடைசி ஓவரை ஸ்பின்னரான அஷ்வின் வீசியதால் 5வது பந்தில் எளிதாக சிக்சர் அடித்து ராகுல் திரிபாதி கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவர் அளித்த இந்த சிக்சர் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் தான் அடித்த அந்த முக்கியமான சிக்சர் குறித்து பேசியுள்ள ராகுல் த்ரிப்பாதி கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலே மிகச் சிறப்பான தருணம். குவாலிபயர் போட்டியில் வெற்றி மிகவும் அவசியமான ஒன்று. எங்களது அணியின் வீரர்கள் கடைசியில் இதுபோன்று சில ஓவர்களை சந்தித்து இறுதிவரை போட்டியை கொண்டு செல்வோம் என்று நினைக்கவில்லை.
இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் பெருமை அடைய வைக்கிறது. 18 ஆவது ஓவரை வீசிய ரபாடா சிறப்பாக வீசினார். இறுதி ஓவரில் நிச்சயம் என்னால் ஒரு சிக்சரை அடிக்க முடியும் என நினைத்தேன். ஆனால் முதலில் நாங்கள் நினைத்த பிளான் என்னவெனில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்து விட்டால் அப்புறம் ரன்கள் ஓடி ஆட்டத்தை முடிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்த மைதானத்தில் சிங்கிள் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. அதிலும் குறிப்பாக புது பேட்ஸ்மேன் வந்து சிங்கிள் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது.
இதையும் படிங்க : ஒரு கட்டத்துல தோத்துட்டோம்னு நெனச்சேன். ஆனா கடைசில – வெற்றி குறித்து பேசிய இயான் மோர்கன்
இருப்பினும் நான் அந்த இறுதி இரண்டு பந்தில் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன். அதுமட்டுமின்றி ஒரே ஒரு சிக்சர் அடித்தால் வெற்றி என்பதை நான் நினைத்து விளையாடினேன். பந்து மிகவும் லோவாக வந்ததால அடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் ஒரு வழியாக நான் சிக்சர் அடித்து முடித்தேன் என ராகுல் த்ரிப்பாதி கூறியது குறிப்பிடத்தக்கது.