ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அந்த அணி மே 21ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் 2வது இடம் பிடித்த ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 160 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55, ஹென்றிச் க்ளாஸென் 32 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணி 13.4 ஓவரிலேயே 164 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 58* (24), வெங்கடேஷ் ஐயர் 51 (28) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.
குர்பாஸ் நெகிழ்ச்சி:
அதனால் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நாடு திரும்பி விட்டார். அதனால் அவருக்கு பதிலாக இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரகமனுல்லா குர்பாஸ் துவக்க வீரராக களமிறங்கி 2 பவுண்டரி 2 சிக்சருடன் 23 (14) ரன்கள் குவித்து வெற்றிக்கான நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
இந்நிலையில் தம்முடைய அம்மா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குர்பாஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் கொல்கத்தா நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் அதுவும் தம்முடைய குடும்பம் என்று கருதி ஐபிஎல் தொடரில் விளையாட வந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அம்மாவுக்கு இன்னும் உடல்நிலை சரியில்லை. அதனால் நான் ஆப்கானிஸ்தானுக்கு சென்றேன்”
“அப்போது பில் சால்ட் அணியிலிருந்து வெளியேறியதால் கொல்கத்தா நிர்வாகம் என்னை அழைத்தனர். குறிப்பாக “குர்பாஸ் நீங்கள் எங்களுக்கு தேவை. உங்களுடைய நிலைமை என்ன?” என்று அவர்கள் எனக்கு மெசேஜ் செய்தனர். அதற்கு நான் வருகிறேன் என்று பதிலளித்தேன். என்னுடைய அம்மா இன்னும் மருத்துவமனையில் குணமாகி வருகிறார். அவரிடம் நான் தினமும் பேசி வருகிறேன்”
இதையும் படிங்க: 5 ஓவரில் 59 ரன்ஸ்.. வங்கதேசத்தை மண்ணை கவ்வ வைத்த அமெரிக்க அணி.. சரித்திர சாதனை வெற்றி
“அதே சமயம் கொல்கத்தா அணியும் என்னுடைய ஒரு குடும்பத்தை போன்றது. எனவே ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கு வந்து விளையாடுவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. இருப்பினும் நான் அதை சமாளிக்கிறேன். ஐபிஎல் போன்ற லீக் தொடர்களில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். எனவே உங்களுக்கு அதில் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.