இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் விளையாடிய பங்களாதேஷ் அணியானது 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்களது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாளான இன்று 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா 55 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் அடித்த இந்த 24 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்டாவது வீரராக புஜாரா ஒரு முக்கியமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா இன்று தனது 16-வது ரன்னை அடிக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த எட்டாவது வீரராக சாதனை புரிந்துள்ளார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியிருந்த அவர் இன்றைய போட்டியில் 16 ரன்களை கடந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை பூர்த்தி செய்தார்.
34 வயதான புஜாரா இதுவரை 98 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 167 இன்னிங்ஸ்களில் 44.79 சராசரியுடன் 7000 ரன்களை கடந்துள்ளார். இதில் 19 சதம் மற்றும் 34 அரை சதமும் அடங்கும். அதோடு அவரது அதிகபட்ச ஸ்கோராக 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 206 ரன்கள் அடித்ததே அவரது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் இவர்தான். ருதுராஜ் கெய்க்வாட் இல்லை – சுரேஷ் ரெய்னா அதிரடி
ஏற்கனவே இந்திய அணிக்காக 7000 ரன்களை கடந்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ் லட்சுமணன், வீரேந்திர சேவாக், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோர் இருக்கும் வேளையில் தற்போது அந்த பட்டியலில் எட்டாவது வீரராக இவர் இந்த ஜாம்பவான் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.