இந்தியாவில் தற்போது உள்ளூர் போட்டி தொடரான ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பல சுற்றுகளாக நடந்துவரும் இந்நிலையில் தற்போது மும்பை மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது .
இந்த போட்டியில் மும்பை அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கி சமீபத்தில் தடைசெய்யப்பட்டு இருந்த இளம் வீரர் ப்ரித்வி ஷா சையது முஷ்டாக் அலி தொடரில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பி அந்த தொடரில் அசத்தினார்.
அதன் பிறகு தற்போது மும்பை அணிக்காக ரஞ்சிப் போட்டியில் விளையாடி வரும் இவர் பரோடா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 84 பந்துகளில் சதமடித்தார். இந்த போட்டியில் மொத்தம் 179 பந்துகளை சந்தித்த ப்ரித்வி ஷா 202 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்களும் மற்றும் 19 பவுண்டரிகள் அடங்கும். முதல் இன்னிங்சில் மும்பை அணி 431 ரன்களும். பரோடா 307 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய மும்பை அணி தற்போது 534 ரன்கள் என்ற இலக்கை பரோடா அணிக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் தோல்வியை தவிர்க்க அந்த அணி போராடி வருவது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக அறிமுகமான பிரித்வி ஷா முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு ஆஸ்திரேலிய தொடரின் போது காயம் ஏற்பட்டு அந்த தொடரில் இருந்து விலகிய அவர் இன்னும் இந்திய அணிக்கு திரும்பவில்லை.
அதற்குள் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவர் இந்திய அணியில் தொடராமல் போனது. அவர் இடம்பெறாமல் போன காரணத்தினால் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக அகர்வால் விளையாடி வருகிறார். இருப்பினும் தற்போது ப்ரித்வி ஷா தனது சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தி வருவதால் ப்ரித்வி ஷாவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் அகர்வாலின் இடம் தற்போது கேள்விக்குறியாக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.