சூதாட்டம் செஞ்சவருக்கு இவ்வளவு பெரிய மரியாதையா? விமர்சனங்களால் பாக் வாரியம் புதிய அறிவிப்பு

Salman Butt Pakistan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் சுமாராக விளையாட விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை பதிவு செய்த அந்த அணி கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்றது.

அதனால் உச்சகட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் தோல்விகளுக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் தம்முடைய அனைத்து வகையான கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்தார். அதே போல தேர்வு குழு தலைவராக இருந்த ஜாம்பவான் இன்சமாம்-உல்-ஹக் தம்முடைய பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து வகாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

எழுந்த சர்ச்சை:
ஆனால் அவருக்கு உறுதுணையாக கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்த 3 பேரில் சல்மான் பட் கடந்த 2010ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோருடன் சேர்ந்து அப்பட்டமான சூதாட்டம் செய்தார்.

சொல்லப்போனால் கேப்டனாக இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அவர் ஆதாரத்துடன் பிடிபட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்றார். அப்படிப்பட்டவரை தேர்வு குழுவின் ஆலோசகராக நியமிப்பது சரிந்து கிடைக்கும் பாகிஸ்தான் அணியை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்லும்? என்று நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

குறிப்பாக சூதாட்டம் செய்த நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவரை தேர்வுக் குழுவில் பார்ப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்ததால் பாகிஸ்தான் தேர்வுக் குழு ஆலோசகராக சல்மான் பட் செயல்படுவார் என்று வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா – ஆஸி மோதும் கடைசி டி20 நடைபெறும் பெங்களூரு மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை தாண்டி பாகிஸ்தான் வாரியத்திற்குள்ளேயே அவருக்கு சில எதிர்ப்புகள் உருவானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் வகாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அசாத் சபிக் புதிய தேர்வு குழுவின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வகாப் ரியாஸ் கூறியுள்ளார். இந்த நிலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement