இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வகையான வடிவங்களில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகி தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக பங்கேற்று விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வந்த விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் மீண்டும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணைய உள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மார்ச் மாதம் நான்காம் தேதி முதல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறவுள்ள இந்த முதலாவது டெஸ்ட் போட்டி விராட் கோலி பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளதால் அந்த முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களின் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
ஏற்கனவே பஞ்சாப் மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா காரணமாக இன்னும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதால் இந்த முதல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இந்த டெஸ்ட் போட்டிக்கான பணியில் ஈடுபடுபவர்கள், வீரர்கள், நிர்வாகிகள் ஆகியவர்களை தவிர வேறு யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரசிகர்கள் இன்றி காலி மைதானத்திலேயே விராட் கோலியின் 100வது டெஸ்ட் நடைபெற உள்ளது. இருப்பினும் இந்த 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள விராட் கோலிக்காக மைதானத்தின் சுற்றுப்புறங்களில் அனைத்து இடத்திலும் பேனர்கள் வைக்கப்படும் என்றும் அதோடு இந்த போட்டிக்குப் பின்னர் விராட் கோலிக்கு பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மார்ச் 12-ஆம் தேதி பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டவாது டெஸ்ட் போட்டியை நேரில் காண 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : INDvsSL : 2 ஆவது போட்டிக்கு பின் இருநாடுகளை சேர்ந்த 2 முக்கிய காயத்தால் ஹாஸ்பிடலில் அனுமதி – ரசிகர்கள் சோகம்
சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வரும் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் தவித்து வரும் வேளையில் தனது 100வது போட்டியில் மிகப்பெரிய கம்பேக்குடன் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.