வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்ட 160 ரன்களை துரத்தும் போது ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி 31/4 என்ற மோசமான தொடக்கத்தை இந்தியாவுக்கு கொடுத்தனர். அதனால் தோல்வி உறுதியென்று ரசிகர்கள் கவலையடைந்த போது இணைந்த கைகளாக செயல்பட்ட விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர்.
பழி தீர்ப்போம்:
அதை விட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் எதிரணியில் ஷாஹீன் அப்ரிடி இருந்தும் பெற்ற இந்த சரித்திர வெற்றியால் கடந்த வருடம் துபாயில் வரலாற்றில் முதல் முறையாக சந்தித்த தோல்விக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா பழி தீர்த்தது. மறுபுறம் கையிலிருந்த வெற்றியை கடைசி ஓவர்களில் சொதப்பலாக பந்து வீசி தாரைவார்த்த பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது.இருப்பினும் இந்த தோல்விக்காக அசராமல் இதே உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவை எதிர்கொண்டு பாகிஸ்தான் வெல்லும் என்று முன்னாள் வீரர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதாவது 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் இதே போல் பரபரப்பாக நடைபெற்ற முதல் போட்டி டை ஆனாலும் பவுல் அவுட் முறையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது. இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் நாக் அவுட் சுற்றை கடந்து இறுதிப் போட்டியில் இந்தியாவை மீண்டும் எதிர்கொண்டது.
மேலும் கடைசி வரை அனல் பறந்த மெல்போர்ன் போட்டி பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இது வரலாற்றில் மிகச் சிறந்த போட்டி என்பதில் சந்தேகமில்லை. பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததால் பந்து எப்படி வருகிறது என்பதை புரிந்து கொள்வதில் கடினமாக இருந்தது. அதனால் 160 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் இன்னும் சற்று அதிகமாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக எங்களுடைய லோயர் மிடில் ஆர்டர் முதிர்ச்சியுடன் செயல்படவில்லை. அத்துடன் இந்த தோல்வியை மனதார ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் வெல்வதற்கு தேவையான யுக்திகளை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும். ஏனெனில் இங்கேயும் சிறப்பாக விளையாடிய நீங்கள் இந்த தோல்வியால் துவண்டு விடக்கூடாது” என்று பேசினார்.