ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நியூஸிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 4 – 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. அடுத்ததாக முகமது ரிஸ்வான் தலைமையில் பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாடியது.
ஆனால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணி அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் எளிதாக வென்று ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியது. அதனால் நியூசிலாந்து சி அணியிடம் பாகிஸ்தான் தோற்றதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக விமர்சித்தார். மேலும் கடைசிப் போட்டியில் தோற்பதற்கு முன்பாக பேசாமல் பாகிஸ்தான் நாடு திரும்பலாம் என்றும் அவர் விமர்சித்தார்.
பாகிஸ்தான் சொதப்பல்:
அந்த சூழ்நிலையில் இந்தத் தொடரின் சம்பிரதாயக் கடைசி போட்டி ஏப்ரல் 5ஆம் தேதி மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்றது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டி இருதரப்புக்கும் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 42 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 264-8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ரைஸ் மரியூ 58, ஹென்றி நிகோலஸ் 31, டேரில் மிட்சேல் 53, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ஆகிப் ஜாவேத் 4, நாசிம் ஷா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி மீண்டும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 40 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூஸிலாந்து சி அணியிடம்:
அதிகபட்சமாக பாபர் அசாம் 50, அப்துல்லா ஷபிக் 33, கேப்டன் ரிஸ்வான் 37, டாயப் தாஹிர் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக பென் சீர்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். கடந்தப் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் இப்போட்டியிலும் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சம்பளமே 25 லட்சம் தான்.. இதுல 75% அபராதம் வேறயா.. அடங்காத லக்னோ வீரருக்கு ஆப்படித்த பிசிசிஐ.. 2 தண்டனை
அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனை அவர் படைத்துள்ளார். அவரது உதவியால் 3 – 0 (3) என்றக் கணக்கில் இத்தொடரை நியூசிலாந்து வென்று அசத்தியுள்ளது. மறுபுறம் பசித் அலி சொன்னது போல நியூஸிலாந்து சி அணிக்கு எதிராக முதன்மைப் பாகிஸ்தான் அணி ஒய்ட்வாஷ் படுதோல்வியை சந்தித்துள்ளது.