ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 67 ரன்களை குவித்தார்.
பிறகு 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை அடித்து இலக்கினை அடைந்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை அடைந்தது. சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான ஷ்ரேயாஸ் கோபால் 4-1-12-3 ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
போட்டிக்கு பிறகு பேசிய பெங்களூரு அணியின் மென்டர் நெஹ்ரா கூறியதாவது : இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரு அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. இந்த போட்டியில் 200 ரன்கள் வரை குவித்திருந்தால் மட்டுமே எதிரணியை கட்டுப்படுத்த முடியும். எனவே, வெற்றிக்கு தேவையான ரன்களை பெங்களூரு அணி அடிக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
மேலும், போட்டியில் பல தவறுகளை செய்திருந்தாலும் அது வெற்றிக்கு இடையூறாக இருக்கவில்லை. அவர்கள் கோட்டைவிட்ட கேட்ச்களே தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இனிவரும் ஆட்டங்களில் கேட்ச் வரும் ஒரு வாய்ப்பினை கூட தவறவிடக்கூடாது என்று நெஹ்ரா கூறினார். இனிவரும் போட்டிகளில் தவறுகளை தவிர்த்து வெற்றிபெறுவதை கருத்தில் கொண்டு வீரர்கள் களமிறங்குவார்கள் என்று நெஹ்ரா கூறினார்.