தல தல தான் ! ஸ்பெஷல் ரசிகையின் கண்ணீரை துடைத்த தோனி – ரசிகர்கள் நெகிழ்ச்சி (விவரம் இதோ)

MS DHoni Fan Lavanya Pilania
- Advertisement -

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக இந்தியாவில் போற்றப்படும் ஒரு மகத்தான கிரிக்கெட் வீரர் ஆவார். அபாரமான கேப்டன்ஷிப், மின்னல் வேக விக்கெட் கீப்பிங், மிரட்டல் பினிஷெர் என பல பரிணாமங்களை கொண்ட அவர் இந்தியாவிற்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே மகத்தான கேப்டன் ஆவார். அவருக்கு விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற இந்திய நட்சத்திர வீரர்கள் மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கின்றனர். அதேபோல் நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் அவருக்கு சின்ன குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய அவர் அதன் பின் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடம் அவர் தலைமையில் களமிறங்கிய சென்னை சுமாராக செயல்பட்டு பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

ஸ்பெஷல் ரசிகை:
அதனால் தற்போது ஐபிஎல் முடிந்து தனது வீட்டுக்கு திரும்பியுள்ள அவர் நேற்று மே 31-ஆம் தேதி சென்னைக்கு ஒரு வேலையாக வருவதற்கு புறப்பட்டார். அதற்காக தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த அவரை ஒரு சிறப்பு மாற்றுத்திறனாளி ரசிகை பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். அதையறிந்த எம்எஸ் தோனி உடனடியாக எந்தவித தயக்கமுமின்றி நேரடியாக அவரிடம் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அவரின் அருகே அமர்ந்து அவரின் கையைப் பிடித்து மகிழ்ச்சியுடன் மனம் விட்டு பேசினார்.

லாவண்யா பிலானியா எனும் பெயருடைய அவர் தமக்கு மிகவும் பிடித்த தோனியை பார்த்ததும் ஆனந்தத்தில் வார்த்தைகளின்றி கண்கலங்கினார். அதை தொடர்ந்து அவருக்காக தனது கையால் வரைந்த ஒரு சிறிய ஓவியத்தை பரிசளித்த அவரிடம் மகிழ்ந்து பேசிய தோனி அதில் தனது ஆட்டோகிராஃப் போட்டு அந்த ரசிகையை மகிழ வைத்தார். சிறப்பு மாற்றுத்திறனாளி ரசிகையை பார்ப்பதற்காக தனது நேரத்தை ஒதுக்கி அவருடன் பேசி மகிழ்ந்த தோனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

நெகிந்த ரசிகை:
தனது ஹீரோவான தோனியை நேரில் பார்த்தது பற்றிய தருணத்தை அந்த ரசிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “மஹி என்னுடைய உலகம், அவரை பார்த்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர் இனிமையாக பேசக்கூடிய நல்ல மனிதர். என்னுடைய பெயரை அவர் கேட்டு கையை கொடுத்து குலுக்கினார். அப்போது “அழ வேண்டாம்” என்று கூறிய அவர் என்னுடைய கண்ணீரைத் துடைத்து விட்டது பேரின்பமாக இருந்தது. மேலும் என்னுடைய ஓவியத்தை பெற்றுக்கொண்ட அவர் அதற்காக நன்றி தெரிவித்து “இதை நான் எடுத்துச் செல்லட்டுமா” என்று கேட்டது என்னுடைய வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது”

“அவர் எனக்காக அவரின் பொன்னான நேரத்தை கொடுத்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மேலும் “நீங்கள் ரொம்ப நல்லா இருக்கீங்க” என்று நான் கூறியபோது அவர் கொடுத்த ரியாக்சன் விலை மதிப்பில்லாதது. 31 மே 2022 நாள் என்னுடைய வாழ்வில் என்றுமே ஸ்பெஷலான ஒரு நாளாகும்” என்று மன நெகிழ்ச்சியுடன் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தனது டிவிட்டரில் பகிர்ந்து உள்ளது.

- Advertisement -

தல தல தான்:
களத்தில் தனது அபார திறமைகளால் சிறப்பான முடிவுகளால் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் எம்எஸ் தோனி தனது கிரிக்கெட்டால் பல ரசிகர்களின் நெஞ்சங்களைக் தொட்டவர். அப்படிப்பட்ட அவர் எப்போதுமே தனது ரசிகர்களை மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் தவறியது கிடையாது. சொல்லப்போனால் பல முறை இதுபோல ரசிகர்களை களத்திலும் களத்திற்கு வெளியேவும் நேரடியாக பார்த்து அவர்களை மகிழ்வித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் ஹார்டிக் பாண்டியாவுக்கு பொருத்தமான பேட்டிங் பொசிஷன் இதுதான் – டேனியல் வெட்டோரி

ஆனால் அவை அனைத்தையும் விட தற்போது இந்த ஸ்பெஷலான மாற்றுத்திறனாளி ரசிகையை நேராக சென்று பார்த்து அவரின் கண்ணீரை துடைத்து மகிழ வைத்தது பல ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டுள்ளது. இதனால் தல தல தான் என்று மீண்டும் தோனி நிரூபித்து விட்டார் என்று அவரின் ரசிகர்கள் பெருமையுடன் பேசுகின்றனர்.

Advertisement