
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்தது. அதில் இளம் இந்திய வீரர் பிரதிவி ஷா எந்த அணிக்காகவும் வாங்கப்படவில்லை. 2018 அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு கேப்டனாக முக்கிய பங்காற்றிய அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து அசத்தினர்.
அதனால் சச்சின், சேவாக், லாரா கலந்த கலவை என்று அவரை அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார். ஆனால் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட பிரிதிவி ஷா ஐபிஎல் தொடரிலும் அசத்தவில்லை. அதே போல உள்ளூர் கிரிக்கெட்டிலும் சுமாராக விளையாடிய அவரை ஃபிட்டாக இல்லை என்று சொல்லி சமீபத்தில் மும்பை அணி ரஞ்சிக் கோப்பையில் கழற்றி விட்டது.
அதன் காரணமாக தற்போது ஐபிஎல் ஏலத்திலும் அவரை யாரும் வாங்கவில்லை என்று சொல்லலாம். இந்நிலையில் அவருக்கு டெல்லி அணியில் போதுமான வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்தவில்லை என்று முன்னாள் துணை பயிற்சியாளர் முகமது கைப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பிரிதிவிக்கு டெல்லி நிறைய ஆதரவு கொடுத்தது. பவர்பிளே வீரராக அவரை கருதிய டெல்லி ஒரே ஓவரில் ஆறு பவுண்டரி அடிப்பார் என்றும் நினைத்தது. அவரும் சிவம் மாவிக்கு எதிராக ஒரு ஓவரில் 6 பவுண்டரி அடித்து அதை செய்து காட்டினார். எனவே அவர் ரன்கள் அடித்தால் நாங்கள் வெல்வோம் என்று எப்போதும் நினைத்தோம். அதனால் அவருக்கு நாங்கள் நிறைய வாய்ப்புகளையும் கொடுத்தோம்”
“இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா வேண்டாமா என்று நாங்கள் விவாதித்த அணி மீட்டிங் உண்டு. ஒரு இரவில் நாங்கள் அவரை நீக்கலாம் என்று முடிவு எடுத்தோம். ஆனால் அடுத்த நாள் அதை மாற்றிக் கொண்டோம். ஏனெனில் அவர் பெரிய ரன்கள் குவித்தால் நம்மால் வெல்ல முடியும் என்று நினைத்தோம். இருப்பினும் அவர் அசத்தாததால் அணிகள் அவரை கடந்து சென்று விட்டன”
இதையும் படிங்க: வெறும் 146 ரன்ஸ் சேசிங்.. ஜிம்பாப்வேவுக்கு பாகிஸ்தான் பதிலடி.. சாய்ம் ஆயுப் தனித்துவ உலக சாதனை
“75 லட்சத்துக்கு வரை யாரும் எடுக்காதது அவமானப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை இப்போது அவர் தன்னுடைய அடிப்படை விளையாட்டுக்கு மீண்டும் சென்று நல்ல பயிற்சிகளை எடுத்து முன்னேறலாம். குறிப்பாக சர்பராஸ் கான் உள்ளூரில் ரன்கள் மேல் ரன்கள் அடித்து இந்திய அணிக்காக வந்ததைப் போல அவர் முயற்சி செய்யலாம்” என்று கூறினார்.