சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி அவ்வப்போது கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த டி20 தரவரிசை பட்டியலில் முதலாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி அந்த அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் மிஸ்பா உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோருக்கு அடுத்து டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பிடிக்கும் மூன்றாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே துவக்க வீரராக களமிறங்கி வரும் முகமது ரிஸ்வான் தனது அசத்தலான ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக முறையை 78 மற்றும் 71 ரன்களை அவர் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் அவருக்கு இந்த முன்னேற்றம் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் இதுவரை சிறப்பான ஃபார்மில் இருக்கும் முகமது ரிஸ்வான் மூன்று போட்டிகளில் 192 ரன்களை குவித்து முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் கடந்த 1155 நாட்கள் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை அவர் தற்போது பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்த டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10-இல் இருக்கும் ஒரே இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் மட்டுமே உள்ளார். முதல் இரண்டு இடங்களிலும் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இருக்க மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரரான மார்க்கம் உள்ளார். அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவ் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : PAK vs AFG : மொத்தமாக தகர்ந்த கனவு – ஆசிய கோப்பை பைனலில் விளையாடும் அணிகள் இதோ
இவரை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரருக்கும் டாப் 10-ல் இடமில்லை. அதே போன்று இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா இந்த பட்டியலில் 14-வது இடத்திலும், இஷான் கிஷன் 19-வது இடத்திலும் உள்ளனர். இதில் சோகமான விடயம் யாதெனில் விராட் கோலி முதல் 20 இடங்களில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.