இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இந்திய அணியில் அஷ்வினுக்கு இதுவரை இடம் கிடைக்கவில்லை. மேலும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அவர் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளதால் அஸ்வினுக்கு ஆதரவாக பல தரப்பிலும் இருந்து கருத்துகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் அஷ்வினை இந்திய அணியில் தேர்வு செய்யாதது குறித்து தனது காட்டமான கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் கருத்தில் : ஆஃப் ஸ்பின்னரான அஸ்வினை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யாதது முட்டாள்தனம் என்று குறிப்பிட்டுள்ளார்.
The non selection of @ashwinravi99 has to be greatest NON selection we have ever witnessed across 4 Tests in the UK !!! 413 Test wickets & 5 Test 100s !!!! #ENGvIND Madness …
— Michael Vaughan (@MichaelVaughan) September 2, 2021
அதுமட்டுமின்றி 413 விக்கெட்டுகள், ஐந்து டெஸ்ட் சதங்களை எடுத்த வீரர் என்றும் அஸ்வினை அவர் குறிப்பிட்டு தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் அனைவரும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் அஷ்வினுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை விராட் கோலிக்கு மட்டும் என்னவோ தெரியவில்லை. அஷ்வினை அணியில் எடுக்காமலேயே வைத்துள்ளார். அடுத்த ஐந்தாவது போட்டியிலாவது அஷ்வினுக்கு ஆறுதல் வாய்ப்பு கிடைக்குமா என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.