இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த வேளையில் 150 ரன்களை கூட தொடாது என்று அனைவரும் நினைத்திருப்பார்கள். ஆனால் ஏழாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹாசன் மற்றும் முகமதுல்லா ஆகியாரது ஜோடி மிகச்சிறப்பாக விளையாடியது.
7 ஆவது விக்கெட்டிற்கு 148 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி பங்களாதேஷ் அணிக்காக ரெக்கார்ட் பாட்னர்ஷிப் அமைத்தது. பின்னர் முகமதுல்லா 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த வேளையில் இறுதிவரை களத்தில் இருந்த மெஹதி ஹாசன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி பந்தில் சதம் அடித்து 100 ரன்களுடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பின்னர் வங்கதேச கிரிக்கெட் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்தது. பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் அடித்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அப்படி இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்த ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது மிகச் சிறப்பான பேட்டிங் குறித்து பேசிய ஆட்டநாயகன் மெஹதி ஹாசன் கூறுகையில் : இந்த வாய்ப்பினை வழங்கிய கடவுளுக்கு நன்றி. வேறு ஏதும் நான் சொல்வதற்கு இல்லை, மிக மகிழ்ச்சியாக உணருகிறேன்.
கடந்த சில வருடங்களாகவே நான் பேட்டிங்கில் கவனத்தை செலுத்தி எனது பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய பயிற்சியாளர்கள் கொடுத்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் தான் இந்த போட்டியில் நான் சதம் அடிக்க காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க : இந்திய பேட்ஸ்மேன்களில் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்த ஷ்ரேயாஸ் ஐயர் – என்ன தெரியுமா?
அதோடு நான் களத்தில் இருந்தபோது முகமதுல்லா என்னிடம் கடைசி வரை பேட்டிங் செய்தால் பெரிய ரன்களை குவிக்க முடியும் என்று தைரியப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்த வகையிலும் நானும் மிகச் சிறப்பாக ஆடியதாக உணர்கிறேன் என மெஹதி ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.