ஐபிஎல் 2023 : சேப்பாக்கம் கோட்டையில் யாராலும் அசைக்க முடியாது, அவர கடைசியா பாக்க போறோம் – சிஎஸ்கே பற்றி ஹைடன்

Hayden
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. அகமதாபாத் நகரில் துவங்கும் இந்த வருட சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி என நிறைய அணிகளுக்கு அந்தந்த மாநில சூப்பர் ஸ்டார்கள் கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் அது மாதிரியான வீரர்கள் இல்லாத காரணத்தால் 2007 டி20 உலகக் கோப்பை வென்று நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்எஸ் தோனியை பெரிய தொகைக்கு வாங்கிய சென்னை தங்களது கேப்டனாக நியமித்தது.

CSK MS Dhoni Ravindra Jadeja

அப்போது முதல் இந்தியாவுக்கு உலக கோப்பைகளை வென்று கொடுத்தது போலவே முதல் சீசனிலிருந்து சென்னையை மிகச் சிறப்பாக வழி நடத்திய அவர் 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 13 சீசன்களில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அவர் ஐபிஎல் வரலாற்றில் சென்னையை கன்சிஸ்டன்சிக்கு பெயர் போன அணியாக போற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

விடைபெறும் நேரம்:
மேலும் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங், அதிரடியான ஃபினிஷிங் போன்ற பல்வேறு திறமைகளால் நிறைய தருணங்களில் தனி ஒருவனாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சென்னை அணியின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக விளங்கும் அவரை தமிழக ரசிகர்கள் தல என்று கொண்டாடி வருகிறார்கள். அதனால் ராஞ்சிக்கு அடுத்தபடியாக சென்னை தன்னுடைய 2வது வீடு என்று பலமுறை தெரிவித்துள்ள தோனி 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் தான் நடைபெறும் என்று அறிவித்து தமிழக ரசிகர்கள் மீது அன்பை வெளிப்படுத்தினார்.

Dhoni

அந்த வகையில் 2019க்குப்பின் 5 வருடங்கள் கழித்து மீண்டும் சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் மஞ்சள் படை ரசிகர்களின் மத்தியில் தோனி தன்னுடைய அற்புதமான கேரியரை தனது ஸ்டைலில் பினிஷிங் செய்வார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹெய்டன் பிரியாத மனதுடன் பேசியுள்ளார். மேலும் எப்போதுமே அதிக வெற்றிகளை பெற்று தனது கோட்டையாக வைத்துள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று வெற்றியுடன் தோனி விடை பெறுவதை ரசிகர்கள் பார்க்க இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சிஎஸ்கே எப்போதும் தனிப்பட்ட சிறப்பான விஷயங்களை செய்வதற்கான வழியை கண்டுபிடித்து விடுவார்கள். இடையே அவர்கள் 2 வருடங்கள் விளையாடாதது துரதிஷ்டவசமானது. ஆனால் அதிலிருந்து அவர்கள் கோப்பையை வென்று மீண்டும் அபார கம்பேக் கொடுத்தது யாரும் எதிர்பாராதது. அது போல இம்முறையும் கம்பேக் கொடுக்க அவர்களிடம் வழி இருக்கிறது. குறிப்பாக இதிலிருந்து புத்துணர்ச்சி பெற்று புதிய உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் வழியை கண்டறியும் தன்மை எம்எஸ் தோனியிடம் இருக்கிறது. அவர் சில வீரர்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து மீண்டும் தக்க வைத்துள்ளார்”

Hayden

“எம்எஸ் தோனியை பொறுத்த வரை இந்த வருடம் அவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கொண்டாட போகிறார்கள். அவரின் மரபு சிறப்பான முறையில் பினிஷிங் அடையும் என்று நம்புகிறேன். அவரும் தன்னுடைய கேரியரை ரசிகர்களுடன் பினிஷிங் செய்ய விரும்புவார். 2023 சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் படை ரசிகர்கள் ஏராளமான ஆதரவை கொடுக்கப் போகிறார்கள். அதனால் சென்னையை அவர்களது சொந்த மைதானத்தில் தோற்கடிப்பது மிகவும் கடினமாகும்”

இதையும் படிங்க:IND vs AUS : எல்லா புகழும் வெங்கியை சேரும், ஆகாஷ் சோப்ராவை கலாய்த்து வரும் ரசிகர்கள் – காரணம் இதோ

“சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை வைத்துள்ள சாதனை ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பானது. அது அவர்களுடைய கோட்டையாகும். அங்கே தங்களுடைய கேப்டன் தோனியை அவர்கள் கிட்டத்தட்ட கடைசி முறையாக பார்க்கப் போவதை வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு கொண்டாடப் போகிறார்கள். தோனி சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரிலிருந்து விடை பெறுவதற்காக காத்திருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement