அனைத்து கிரிக்கெட்டிலும் விளையாட வெ.இ ஜாம்பவான் வீரருக்கு ஐசிசி அதிரடி தடை.. காரணம் என்ன?

Marlon Samuels
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி ஜாம்பவான்கள் என்று போற்றப்படும் அளவுக்கு அந்தஸ்து பெற்ற சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகும். அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மர்லான் சாமுவேல்ஸ் 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் 18 வருடங்களாக விளையாடி 17 சதங்கள் அடித்துள்ளார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட பெருமை கொண்ட அவர் 2012 மற்றும் 2016 டி20 ஃபைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்று கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். அதைத் தொடர்ந்து ஓய்வுக்கு பின் உலகின் பல்வேறு டி20 தொடர்களில் சாமுவேல்ஸ விளையாடி வந்த நிலையில் சூதாட்ட புகாரில் ஈடுபட்டதாக ஐசிசி கடந்த வருடம் குற்றம் சாட்டியது.

- Advertisement -

ஐசிசி தடை:
அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக் தொடரில் விளையாடிய சாமுவேல்ஸ் விதிமுறைகளை மீறி 4 பிரிவின் கீழ் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்த ஐசிசி அதற்கான தண்டனைகள் பின்னர் வழங்கப்படும் என்று 2021 செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் விளையாட மர்லான் சாமுவேல்ஸ்க்கு 6 வருடங்கள் தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

குறிப்பாக 2.4.2 விதிமுறைப்படி பரிசு, பணம், மற்றும் ஆடம்பர வசதிகள் இவற்றை சூதாட்டத்திற்காக பெற்றதை ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவிடம் சாமுவேல்ஸ சொல்லத் தவறியதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் 2.4.3 விதிமுறைப்படி 750 அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகளை சூதாட்டத்திற்காக பெற்றதை அவர் சொல்லத் தவறியதாக ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

அத்துடன் 2.4.6 விதிமுறைப்படி ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது, 2.4.7 விதிமுறைப்படி ஊழல் தடுப்பு அதிகாரிகளின் விசாரணையை தாமதப்படுத்தியது இவற்றையும் சேர்த்து மொத்தம் 4 சூதாட்ட விதிமுறைகளை மர்லான் சாமுவேல் மீறியுள்ளது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி ஜென்ரல் மேனேஜர் அலெக்ஸ் மார்சல் கூறியுள்ளார். எனவே அடுத்த 6 வருடங்களுக்கு அவர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்க இந்த – 2 பேருக்கே வாய்ப்பு

இந்த தடை வரும் நவம்பர் 11, 2023 முதல் 2029ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அதள பாதாளத்தில் திண்டாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மர்லான் சாமுவேல்ஸ் இப்படி ஒரு அவப்பெயரை வாங்கி கொடுத்துள்ளார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement