ஆர்சிபி’க்கு விளையாட விருப்பமே இல்ல.. அவர் தான் மிரட்டி ஆடவச்சாரு.. பிரவீன் குமார் பேட்டி

Praveen Kumar RCB
- Advertisement -

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் இந்தியாவுக்காக 2007 – 2012 வரையிலான காலகட்டங்களில் 6 டெஸ்ட் மற்றும் 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதில் 27 மற்றும் 77 விக்கெட்களை எடுத்த அவர் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற சிபி முத்தரப்பு கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியதை ரசிகர்களால் மறக்க முடியாது.

அதன் காரணமாக 2011 உலகக் கோப்பையிலும் விளையாடுவதற்கு தேர்வான அவர் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறியதால் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டார். அதன் பின் காயத்தால் தடுமாறிய அவர் ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அதனால் 2012க்குப்பின் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு கொடுத்த அப்போதைய கேப்டன் தோனி இவரை கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

மிரட்டல் வாய்ப்பு:
அதை தொடர்ந்து 2018இல் விடைபெற்ற பிரவீன் குமார் தற்போது கிரிக்கெட்டில் இருந்து வெகு தூரம் சென்று விட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய தாம் முதலில் டெல்லி அணிக்காக விளையாட விரும்பியதாக பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போதைய ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி பெங்களூரு அணிக்காக விளையாடாமல் போனால் கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டியதாக பிரவீன் குமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அதனால் பெங்களூரு அணிக்காக விளையாடியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பெங்களூரு அணிக்காக நான் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் பெங்களூரு என்னுடைய ஊரிலிருந்து மிகவும் தொலைவில் இருக்கிறது”

- Advertisement -

“மேலும் எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது என்பதுடன் அங்குள்ள உணவுகள் அதிகம் பிடிக்காது. மறுபுறம் மீரட்டுக்கு மிகவும் அருகில் டெல்லி இருந்தது. எனவே அந்த அணிக்காக விளையாடினால் நாம் சமயம் கிடைக்கும் போது வீட்டுக்கு சென்று வரலாம் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் ஒரு நபர் என்னை வலுக்கட்டாயமாக பெங்களூரு அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்தார். முதலில் அது ஒப்பந்தம் என்பதே எனக்கு தெரியாது”

இதையும் படிங்க: சரியான ரூட்டுல போய்ட்டு இருக்கோம்.. இந்திய தேர்வுக் குழுவை பாராட்டிய முன்னாள் செலக்டர் சரந்தீப் சிங்

“அவர்களிடம் நான் பெங்களூரு அணிக்காக அல்ல டெல்லிக்காக விளையாட விரும்புவதாக சொன்னேன். ஆனால் லலித் மோடி என்னை அழைத்து கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டினார்” என கூறினார். முன்னதாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு காரணமாக இருந்த லலித் மோடி பிசிசிஐ நிர்வாகத்திலும் முக்கிய நபராக இருந்தார். அதனால் அவர் விரும்பும் அணிக்கு தம்மை போன்ற வீரர்களை வலுக்கட்டாயமாக ஒப்பந்தம் செய்து விட்டதாக பிரவீன் குமார் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement