இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டைலர் 73 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய கைல் ஜேமிசன் பேட்டிங்கில் 24 பந்தில் 25 ரன்களை குவித்தார். அதில் குறிப்பாக 10 ஆவது வீரராக களமிறங்கி 2 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி என பேட்டிங்கில் அசத்தினார் மேலும், பந்துவீச்சிலும் 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது ஆட்டநாயகன் விருது வாங்கிய உடன் அவர் பேசியதாவது : நியுஸிலாந்து அணிக்காக ஆடுவேன் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கனவு நினைவானது போன்று உள்ளது. ஆடும்போது நான் எதுவுமே நினைக்கவில்லை. 50 ஓவர் வரை நின்று ஆடினால் போதும் என்று நினைத்தேன். மேலும் 230 – 240 ரன்கள் எடுத்து விட்டால் போதும் என்று நினைத்தேன்.
ஆனால் டெய்லர் ஆடிய விதம் அருமையாக இருந்தது. அவருடன் நானும் இணைந்து இறுதிவரை ஆட நினைத்தேன். முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட் பல ஆயிரம் மக்கள் முன்னால் ஆடுகிறோம். நன்றாக ஆடவேண்டும் என்று நினைத்து ஆடினேன் இவ்வாறு அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.