ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முதல் போட்டியை தவிர ஏனைய அனைத்து போட்டிகளும் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்தது என்றே கூறலாம். குறிப்பாக 5 முறை கோப்பைகளை வென்ற வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் களமிறங்கிய டெல்லி 178 என்ற இலக்கை துரத்தியது.
அப்போது அந்த அணியின் டாப் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 72/5 என தவித்த அந்த அணி தோல்வி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் கடைசி 5 ஓவர்களில் ஜோடி சேர்ந்த இந்திய வீரர்கள் அக்சர் படேல் 38* ரன்களும் லலித் யாதவ் 48* ரன்களும் எடுத்து 75* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பைக்கு ஷாக் கொடுத்து டெல்லிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
அசத்திய குல்தீப் யாதவ்:
அந்த போட்டியில் டெல்லி அணி சார்பில் பந்துவீசிய இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் கொடுத்து ரோகித் சாரமா, கைரன் பொல்லார்ட் உட்பட முக்கியமான 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் காரணமாக அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர் பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பலத்த பாராட்டுகளை பெற்றார். ஏனெனில் கடந்த 2018-ஆம் ஆண்டு வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் முக்கிய வீரராக வலம் வந்த அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அபாரமாக செயல்பட்டு வந்தார்.
இருப்பினும் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது முதல் முறையாக விக்கெட்டுகளை எடுக்க தடுமாறிய அவரை அனைத்து பேட்ஸ்மேன்களும் சரமாரியாக அடித்து ரன்களை குவித்தனர். அப்போது பார்ம்மை இழந்த அவருக்கு கடந்த சில வருடங்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரிய அளவில் வாய்ப்பு வழங்கவில்லை. அதன் காரணமாக இந்திய அணியிலும் தூக்கி எறியப்பட்ட அவர் கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போகும் ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
புதிய குற்றசாட்டு:
இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்த டெல்லி அணி நிர்வாகம் 2 கோடிக்கு வாங்கியதுடன் முதல் போட்டியிலேயே வாய்ப்பையும் அளித்தது. அதைப் பயன்படுத்திய குல்தீப் யாதவ் அந்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தி ஆட்ட நாயகன் விருதை வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில் பார்ம் இழந்து தவித்த வேளைகளில் கொல்கத்தா அணி நிர்வாகம் குல்தீப் யாதவை ஒரு வேலைக்காரனை போல் நடத்தியதாக அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே புதிய குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் குல்தீப் யாதவ் என்றும் அந்த அளவுக்கு மோசமாக செயல்படவில்லை நன்றாகத்தான் விளையாடினார். இருப்பினும் அந்தத் தருணங்களில் கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை அணிக்குள் மதிக்காமல் ஒரு வேலைக்காரனை போல நடத்தியது. அதன் காரணமாக மதிக்காத ஒரு இடத்திலிருந்து எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்று நினைக்குமளவுக்கு குல்தீப் யாதவ் தள்ளப்பட்டார். அதேபோல் இன்று 9 – 10 கோடிக்கு வாங்கப்பட்டிருக்க வேண்டிய அவரை தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்ததன் காரணமாக வெறும் 2 கோடிக்கு மட்டுமே வாங்கப் பட்டுள்ளார். இது அவருக்கு ஒரு இழப்பு என்றாலும் தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணிக்குள் நுழைய போராட தொடங்கியுள்ளார்” என கூறினார்.
கப் பேக் கொடுப்பரா குல்தீப்:
அவர் கூறுவது போல கடந்த 2 வருடங்களில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே கொல்கத்தா அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பளித்து எஞ்சிய நேரங்களில் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்தது. அதன் காரணமாக களத்தில் இறங்கி விளையாட முடியாமல் போன காரணத்தால் இழந்த தனது பார்ம்மை மீட்டெடுக்க முடியாமல் தவித்தார்.
ஒருவேளை உபயோகம் இல்லாதவர் என கொல்கத்தா அணி நினைத்திருந்தால் முன்பே கழட்டிவிட்டு இருக்கலாம். அப்படி செய்திருந்தால் முன்கூட்டியே அந்த அணியிலிருந்து வெளியே வந்து வேறு ஏதோ ஒரு அணிக்கு விளையாடி சீக்கிரம் பாரம்க்கு வந்து இப்போது 9 – 10 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு போயிருப்பார் என கபில் பாண்டே தனது மாணவனுக்கு ஏற்பட்ட நிலைமையின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் இப்போதும் தாமதமாகவில்லை எனக் கூறிய அவர் இந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு குல்தீப் யாதவ் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.