இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த 23 ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்து இருந்தது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர். குறிப்பாக துவக்க வீரர் தவான் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து விராட் கோலி 56 ரன்களும். ராகுல் 62 ரன்களும், க்ருனால் பண்டியா 58 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் இறுதி 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவித்தது.
இந்தப் பெரிய ரன் குவிப்பிற்கு காரணமாக அறிமுக வீரராக களமிறங்கிய க்ருனால் பாண்டியா இருந்தார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் 26 பந்துகளில் அறிமுகப்போட்டியில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தது மட்டுமின்றி 31 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி என 58 ரன்கள் அடித்து அசத்தினார்.
இவரின் இந்த அதிரடியான ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என அனைவரும் பாராட்டி வரும் வேளையில் க்ருனால் பாண்டியா குறித்த ஒரு சுவாரசிய தகவலை இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோரே வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது :
Great to see @krunalpandya24 make his ODI debut, saw him as a seven year old coming to my academy and since then he has made rapid strides in his career, all the best Young man #cricket #IndvEng
— Kiran More (@JockMore) March 23, 2021
க்ருனால் பாண்டியா ஒருநாள் போட்டியில் அறிமுகமானதை பார்க்க அருமையாக உள்ளது. அவர் ஏழு வயதில் எனது கிரிக்கெட் அகாடமிக்கு வந்தார். அதன் பிறகு தற்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய முன்னேற்றம் அடைந்து உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.