பாண்டியாவுக்கு எதிர்ப்பு? ரோஹித் போலவே ஏற்படும் கதி.. பொல்லார்ட் இன்ஸ்டாகிராம் பதிவால் மும்பை ரசிகர்கள் சோகம்

Rohit Sharma Pollard
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக தங்களின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அறிவித்துள்ளது அந்த அணி ரசிகர்களிடமே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சச்சின் தலைமையில் கோப்பையை வெல்வதற்கு திண்டாடிய மும்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

அதே வேகத்தில் குறுகிய காலத்தில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் மும்பை வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அதனால் சென்னைக்கு தோனியை போலவே மும்பைக்கு ரோஹித் சர்மா கடைசி வரை கேப்டனாக இருப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

பொல்லார்ட் பதிவு:
ஆனால் கோடிகளை கொடுத்தாலும் கோப்பைகளை வெல்ல முடியாமல் திண்டாடும் பெங்களூரு போன்ற பல அணிகளுக்கு மத்தியில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மறந்த மும்பை நிர்வாகம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை கழற்றி விடுவதாக அறிவித்தது. அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் அந்த அணியை பின்தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா, சூரியகுமார் யாதவ் ஆகியோரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பையின் இந்த முடிவுக்கு மறைமுகமான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைரன் பொல்லார்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு.

- Advertisement -

“மழை முடிந்ததும் அது வரை உதவிய குடை அனைவருக்கும் பாரமாகி விடும். அதே போல தான் பயன்பெறுவது நின்று விட்டால் விஸ்வாசமும் நின்று விடும்” என்று பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் ஹர்டிக் பாண்டியாவுக்காக ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பொல்லார்ட் இப்படி பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். மேலும் 2009 – 2021 வரை மும்பையின் பல மகத்தான வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய பொல்லார்ட் 2022 சீசனில் சுமாராக செயல்பட்டார்.

இதையும் படிங்க: ரோஹித் மற்றும் கோலியின் எதிர்காலத்தை முடிவுசெய்யப்போகும் மீட்டிங் – ஜெய் ஷா எடுப்பதுதான் முடிவாம்

அதனால் அவரை பெஞ்சில் அமர வைத்த மும்பை பின்னர் கழற்றி விட்டது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்த பொல்லார்ட் கடந்த வருடம் மும்பையின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். ஒருவேளை தற்போது பாண்டியா புதிய தலைமை பொறுப்பை ஏற்பதால் ரோகித் சர்மாவை போல இவரையும் மும்பை கழற்றி விட முடிவெடுத்துள்ளதா என்ற சந்தேகமும் இந்த பதிவால் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement