ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி துவங்கப்பட்ட அந்த தொடரில் இதுவரை 58 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. குறிப்பாக மே எட்டாம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற 58வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின.
அப்போது திடீரென மின்விளக்குகள் அணைக்கப்பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இறுதியில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தரம்சாலா மைதானத்தை தாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிய வந்தது. அதனால் போட்டியை மொத்தமாக நிறுத்திய பிசிசிஐ வீரர்கள் மற்றும் ரசிகர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிசிசிஐ அறிவிப்பு:
அடுத்ததாக இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பின்பு தான் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று செய்திகள் வெளி வந்தன. இருப்பினும் அதை மறுத்துள்ள பிசிசிஐ ஒரு வாரத்திற்கு மட்டுமே ஐபிஎல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஒரு வாரம் முடிந்ததும் நிலைமைகளை ஆராய்ந்து அரசாங்கத்தின் சம்மதத்துடன் புதிய தேதிகள் மற்றும் அட்டவணைகள் வெளியிடப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “2025 டாட்டா ஐபிஎல் தொடரை ஒரு வாரம் தற்காலிகமாக நிறுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. தொடரின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள், தேதிகள் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பங்குதாரர்களுடன் ஆலோசித்து நிலைமையை ஆராய்ந்த பின் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்”
ஒரு வாரம் மட்டுமே:
“இந்த முடிவு வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்ஸர்கள் மற்றும் ரசிகர்களின் நலன் கருதி ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஆலோசித்த பின் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில் பிசிசிஐ தேசத்துடன் இணைந்து நிற்கிறது. நாங்கள் இந்திய அரசாங்கம், ராணுவ வீரர்கள் மற்றும் மக்களுடன் இணைந்து நிற்கிறோம்”
இதையும் படிங்க: 27 கோடிக்கு சொதப்பிய ரிஷப் பண்ட்.. தோனியை பாத்து இந்த 2 பிரச்சனையை சரி பண்ணனும்.. சித்து அட்வைஸ்
“பிசிசிஐ சுயநலமின்றி நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்கிறது. கிரிக்கெட் தேசத்தின் ஆர்வமாக இருந்தாலும் தேசத்தை விட பாதுகாப்பை விட எதுவும் பெரியது கிடையாது. எனவே நமது நாட்டை பாதுகாப்பதற்காக பிசிசிஐ அனைத்து வழிகளிலும் உதவி செய்யும்” என்று கூறியுள்ளது. இதனால் பதற்றமான சூழல் முடிந்ததும் ஐபிஎல் தொடர் மீண்டும் நடப்பதற்கு பிரகாச வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.