- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நம்பலனாலும் அதான் நெசம், ஐசிசி தொடர்களில் இந்தியா சொதப்புகிறார்கள் – முன்னாள் இங்கி கேப்டன் கருத்து

உலக அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கும் இந்தியா 2வது கோப்பையை வெல்ல முன்னதாகவே ஆஸ்திரேலியா பயணித்து அங்கு பயிற்சிப் போட்டிகளில் விளையாடி தயாராகி வருகிறது. இருப்பினும் முதன்மை சுழல்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே காயத்தால் வெளியேறிய நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் அவரை தவிர்த்து தேர்வாகியுள்ள புவனேஸ்வர் குமார் போன்ற பவுலர்கள் வேகத்துக்கு கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் 120 – 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசக்கூடிய மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வள்ளலாக வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இது போக பேட்டிங் துறையிலும் ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஆகியோர் தடுமாற்றமான பார்மில் இருப்பதால் இந்த உலகக் கோப்பையை இந்தியாவால் வெல்ல முடியுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.

- Advertisement -

நம்பலானாலும் நெசம்:
அதற்கேற்றார் போல் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் சோதனை முயற்சி என்ற பெயரில் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தொடர்ந்து மாற்றங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதைவிட கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக முன்னேறிய இந்தியா 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட செல்லாமல் மண்ணை கவ்வியது. இதனால் அழுத்தமான பெரிய தொடர்களில் திண்டாடும் இந்தியா அந்த பழைய கதையில் இன்னும் முன்னேறாமலேயே இருக்கிறது.

ஏனெனில் கடைசியாக கடந்த 2013இல் தோனி தலைமையில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா அதன்பின் 2014, 2015, 2016, 2017, 2019 ஆகிய வருடங்களில் நடந்த அடுத்தடுத்த உலககோப்பைகளில் லீக் சுற்றில் அசத்தினாலும் அழுத்தமான நாக்-அவுட் சுற்றில் முக்கிய நேரங்களில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. அதன் உச்ச கட்டமாக கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் முதன்முறையாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

அப்படி என்னதான் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் ஐசிசி தொடர்கள் என்று வரும் போது இந்தியா சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களால் மறுக்க முடியாது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். அதனால் இருதரப்பு தொடர்களில் எப்படி எதிரணிகளை பந்தாடுகிறமோ அதே நினைப்புடன் அதே அணுகுமுறையுடன் உலக கோப்பையில் விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும் எனக்கூறும் அவர் இந்த தொடரில் இந்தியாவின் வெற்றியை சூர்யகுமார் யாதவ் ஆட்டம் தான் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஐசிசி தொடர்களில் இந்தியாவிடம் உண்மையாகவே பிரச்சனை உள்ளது. தற்சமயத்தில் அவர்கள் நிறைய வீரர்களுக்கு ஓய்வளித்து சுழற்சி முறையில் வாய்ப்பளித்து அனைத்து எதிரணிகளை தோற்கடித்து உலக கோப்பைக்கு சென்றுள்ளார்கள். ஆனால் உண்மையாக என்னவெனில் ஐசிசி உலக தொடர்களில் பாதாளத்தில் வீழ்வது போல் சில பயமுறுத்தும் கிரிக்கெட்டை அவர்கள் விளையாடி வருகின்றனர்”

“இருப்பினும் கடந்த உலக கோப்பையில் குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அவர்கள் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடினார்கள். அந்த அணுகுமுறையை தொடர வேண்டும். அதே சமயம் சூர்யகுமார் யாதவ் நம்ப முடியாத பார்மில் உள்ளார். இருப்பினும் அவர்கள் ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய 2 சிறந்த வீரர்களை தவற விட்டுள்ளனர். அத்துடன் 7வது இடத்தில் திடமான பேட்ஸ்மேன் உங்களிடம் இருந்தால் டாப் 6 பேட்ஸ்மேன்கள் பயமின்றி விளையாட வழிவகுக்கும். ஆனால் அந்த இடத்தில் ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர்கள் இல்லாமல் இருப்பது இந்திய அணியில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருந்தாலும் இருதரப்பு தொடர்களில் வெல்லும் அதே மனநிலைமையை அவர்கள் உலக கோப்பையிலும் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -