இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
மேலும் ரோஹித் சர்மா முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்படுவதால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லாமல் நிற்க மாட்டோம் என்ற வகையில் இந்தியா மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம். அந்த நிலைமையில் நெதர்லாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக சந்தித்த தோல்விகளை தவிர்த்து தொடர்ந்து அசத்தி வரும் தென்னாப்பிரிக்கா 2வது அணியாகவும் ஆஸ்திரேலியா 3வது அணியாகவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
கைஃப் கருத்து:
அதில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 2வது செமி ஃபைனலில் மோதுவதும் இப்போதே உறுதியாகியுள்ளது. எனவே எஞ்சியிருக்கும் 4வது இடத்தை பிடித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுடன் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் முதல் செமி ஃபைனலில் மோதப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. அதில் அதிக ரன்ரேட்டை பெற்றுள்ள நியூசிலாந்து தங்களின் கடைசி போட்டியில் இலங்கையை தோற்கடித்தாலே இந்தியாவுடன் மோதுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. அதே சமயம் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
குறிப்பாக அகமதாபாத் நகரில் மோதிய போது 191 ரன்களுக்கு சுருட்டி உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக அவமான தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு செமி ஃபைனலில் பாகிஸ்தான் பதிலடி கொடுத்து பழி தீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் அந்நாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் செமி ஃபைனலுக்கு வந்தாலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் வெல்ல முடியாது என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 950 நாட்கள்.. பரிதாப பாபர் அசாமை முந்திய சுப்மன் கில்.. அப்ரிடியை முந்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சிராஜ்
ஏனெனில் இதுவரை 8 முறை தோற்கடித்ததை போலவே இம்முறையும் இந்தியா ஒரு தலைப்பட்சமாக பாகிஸ்தானை வீழ்த்தும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் வந்தாலும் அது ஒரு தலைப்பட்சமான போட்டியாகவே இருக்கும். ஏனெனில் வரலாற்று புத்தகத்தை நான் புரட்டிய போது அதில் அவர்களை இந்தியா எளிதாக தோற்கடித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு இப்போதும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ரன்ரேட் பிரச்சனை இருப்பதால் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் நன்றாக விளையாடி பெரிய வெற்றியை பெற வேண்டும்” என்று கூறினார்