IND vs SL : தோல்வி அடைந்தாலும் இலங்கை வீரருக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருது. என்ன காரணம்? – அவர் பேசியது என்ன?

Dunith-Wellalage
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தாலும் இலங்கை அணியை சேர்ந்த 20 வயதான ஆல்ரவுண்டர் துனித் வெல்லாலகேவின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதோடு அவர் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது போன்று அதிரடியாக விளையாடாமல் நிதானமாக துவங்கியது. அதன்பிறகு அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இலங்கை அணியை சேர்ந்த துனித் வெல்லாலகே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை கட்டி போட்டார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 40 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் என ஐந்து முக்கிய வீரர்களையும் வீழ்த்தினார்.

இப்படி பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்ட வெல்லாலகே 214 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தியபோது இலங்கை அணியானது ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தனஞ்செயா டி சில்வாவுடன் சேர்ந்து ஏழாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். அதே வேளையில் இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 46 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 42 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இறுதி வரை களத்தில் நின்று அவர் பேட்டிங்கில் போராடியிருந்தாலும் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இப்படி பந்துவீச்சில் 5 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 42 ரன்கள் குவித்த அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் துனித் வெல்லாலகே கூறியதாவது : முதலில் நான் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இதையும் படிங்க : IND vs SL : இப்படி கஷ்டமா இருக்கும்னு நாங்க யோசிக்கல. இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு – தசுன் ஷனகா வருத்தம்

ஆனாலும் இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது வருத்தமாக தான் இருக்கிறது. எனினும் எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பான போட்டியை அளிப்போம். குல்தீப் யாதவ் ஒரு மிகச் சிறப்பான பந்துவீச்சாளர். நான் இந்த போட்டியில் என்னுடைய சாதாரணமான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்பினேன். அதோடு பாசிட்டிவாக விளையாடினால் நிச்சயம் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் பாசிட்டிவாக விளையாடினேன். எனது அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருமே எனக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களது ஆதரவும் எனது சிறப்பான செயல்பாட்டிற்கு ஒரு காரணம் என துனித் வெல்லாலகே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement