சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைகளில் ஐசிசி கொண்டு வந்துள்ள 8 மாற்றங்களின் பட்டியல்

ICC
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் தனது கட்டுப்பாட்டில் நடத்தி வரும் ஐசிசி லண்டனில் உள்ள எம்சிசி அமைப்புடன் இணைந்து அதற்கான விதிமுறைகளை கடைபிடித்து வருகிறது. உலகின் இதர அனைத்து துறைகளைப் போல கிரிக்கெட்டும் கடந்த 145 வருடங்களாக பல்வேறு பரிணாமங்களைக் கண்டு வளர்ந்து வருகிறது. அதில் அவ்வப்போது காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அடிப்படை விதி முறைகளில் மாற்றங்கள் தேவைப்படுவதால் அது பற்றி அனைத்து உறுப்பு நாடுகளிடமும் இணைந்து விவாதிக்கும் ஐசிசி அனைவரின் அனுமதியுடன் தேவையான மாற்றங்களை செய்வது வழக்கமாகும்.

icc

- Advertisement -

அந்த வகையில் மகளிர் கிரிக்கெட் கமிட்டியுடன் இணைந்து கடந்த 2017 எம்சிசி கிரிக்கெட் விதிமுறைகளின் 3வது பதிப்பை விவாதித்த சௌரவ் கங்குலி தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் பரிந்துரைகளை தற்போது ஐசிசி தலைமை நிர்வாகக் குழு அங்கீகரித்து மாற்றங்களை அறிவித்துள்ளது.

அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் வரும் 2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் செய்யப்பட்ட விதிமுறைகளைப் பற்றி பார்ப்போம்:
1. அடுத்த பேட்டர்: எந்த வகையான சர்வதேச போட்டியாக இருந்தாலும் ஒரு பேட்டர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து செல்லும்போது களத்தில் இருக்கும் பேட்டர்கள் மாறினாலும் இல்லையென்றாலும் அடுத்த பந்தை அடுத்ததாக களமிறங்கும் பேட்டர் தான் எதிர்கொள்ள வேண்டும்.

2. தாமதத்துக்கு தடை: பொதுவாக புதிய பேட்டர் களமிறங்கும் போது தன்னுடைய பேட்டிங் கார்ட் எடுப்பது உட்பட முதல் பந்தை சந்திப்பதற்கு முன்பாக சற்று அதிகப்படியான நேரங்கள் எடுத்துக் கொள்வார்கள். அதை தடுப்பதற்காக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் களமிறங்கும் போது 2 நிமிடத்திற்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே நிலுவையில் உள்ள 90 விநாடிகள் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

- Advertisement -

3. சலிவாவுக்கு தடை: கரோனா காரணமாக பந்து மீது பந்து வீச்சாளர்கள் சலிவாவை பயன்படுத்தி தேய்ப்பதற்கு பழைய நிலைமை திரும்பும் வரை கடந்த சில வருடங்கள் முன்பாக தற்காலிக தடை விதிக்கப்பட்டது. அந்த தடை தற்போது நிரந்தரமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Saliva Ban

4. பேட்டர்களின் விலகல்: பந்து வீசும்போது பேட்டர்கள் பிட்ச்சின் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்க வேண்டும். ஏதேனும் காரணத்திற்காக சற்று தள்ளியிருந்தால் அந்த பந்தை நடுவர் டெட் பால் என்று அறிவிப்பார்.

- Advertisement -

5. கவனத்தை சிதைத்தால்: ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசும்போது அவருடைய கவனத்தை சிதற வைக்கும் யாராக இருந்தாலும் அதற்கு தண்டனையாக அவர்களுடைய அணிக்கு அம்பயர் 5 ரன்கள் பெனால்டியாக அறிவிப்பார், அத்துடன் அந்த பந்து டெட் பால் என அறிவிக்கப்படும்.

Ashwin Buttler Mankad

6. மன்கட் தடை: ரவிச்சந்திரன் அஷ்வினின் போராட்டத்திற்கு வெற்றியாக எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதற்கு முன்பாக வெள்ளைக்கோட்டை தாண்டினால் அவுட் செய்வதை ரன் அவுட் என சமீபத்தில் அறிவித்த எம்சிசி அதை அதிகாரப்பூர்வமாக்கியது. அதை ஏற்றுள்ள ஐசிசி தற்போது மன்கட் எனும் வார்த்தையை முற்றிலுமாக நீக்கி அந்த வகையான அவுட்டை அறநெறிக்கு எதிரான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி அறிவித்துள்ளது.

- Advertisement -

7. ரன் அவுட்: இதுவரை ஒரு பவுலர் பந்து வீச துவங்குவதற்கு முன்பாக ஸ்ட்ரைக்கர் திசையில் இருக்கும் ஒரு பேட்டர் விக்கெட்டுக்கு (பிட்ச்) கீழே முன்னோக்கி செல்வதை கண்டால் அந்த பவுலர் அந்த ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்ய பந்தை வீசலாம். ஆனால் அந்த நடைமுறை இனிமேல் டெட் பால் என்றழைக்கப்படும்.

IND vs PAK Deepak Hooda INdia

8. இதர மாற்றங்கள்: முன்னதாக குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி பந்து வீசி முடியவில்லையெனில் அதன் கேப்டன் மற்றும் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நடைமுறை சமீபத்தில் மாற்றப்பட்டது. அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடியவில்லையெனில் குறிப்பிட்ட நேரத்தை கடந்து பந்து வீசும் ஓவர்களில் உள்வட்டத்திற்கு வெளியே நிறுத்தப்படும் பீல்டர்களில் ஒருவரை குறைத்து தண்டனை வழங்கப்படும்.

சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட கடந்த ஜனவரி முதல் டி20 கிரிக்கெட்டில் மட்டும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த விதிமுறை இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கடைபிடிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் 2023 ஐசிசி ஆடவர் சூப்பர் லீக் தொடருக்குப் பின் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த விதிமுறை அமலுக்கு வரும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

Advertisement