டி20 உ.கோ’யில் முதல் ரவுண்டுக்கு தாங்குமானு பாருங்க – பாகிஸ்தானை விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர், காரணம் என்ன

Pak Shadab Khan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல உலகின் அனைத்து அணிகளும் இறுதிகட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் 2009க்கு பின் 2வது கோப்பையை வெல்ல நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் தலைமையில் தயாராகி வரும் பாகிஸ்தான் அத்தொடருக்கு முன்பாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் 4 – 3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வி பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 210 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் திணறிய பாகிஸ்தான் 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

இத்தனைக்கும் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக திகழும் முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இருந்தும் இப்படி தோற்றது அந்த அணி ரசிகர்கள் கடுப்பாக வைத்துள்ளது. சமீப காலங்களாகவே பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் அந்த 2 உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை தவிர்த்து தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இருப்பதால் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. இருப்பினும் பெரும்பாலான போட்டிகளில் அந்த இருவரும் சிறப்பாக செயல்பட்டு அதை மறைத்தாலும் அனைத்துப் போட்டிகளிலும அவர்களால் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையில் அவர்கள் தடுமாறும் போது பாகிஸ்தான் இப்படி தோற்று விடுகிறது.

முதல் ரவுண்டு தாங்குமா:
அதனாலேயே சமீபத்திய ஆசிய கோப்பையில் இலங்கையிடம் ஃபைனலில் தோல்வியை சந்தித்த போதிலும் இன்னும் அந்த பிரச்சனையை பாகிஸ்தான் அணி நிர்வாகம் சரி செய்யாமல் இருந்து வருவது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. அது போக பொதுவாகவே நல்ல பவுலிங்கை கொண்டிருக்கும் அணியாக கருதப்படும் பாகிஸ்தான் இந்த தொடரில் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை பரிசளித்தது.

IND vs PAk Rahul Hardik Pandya

இதனால் பரம எதிரியான இந்தியாவை தோற்கடித்தால் போதும் எஞ்சிய போட்டிகளில் தோற்றாலும் பரவாயில்லை என்ற அணுகு முறையுடன் பாகிஸ்தான் விளையாடுவதாக அந்த அணியின் கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் என அனைவரையும் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சிக்கின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் சோயப் அக்தர் ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்தும் கொஞ்சமும் முன்னேறாமல் சொந்த மண்ணிலேயே தோற்ற நீங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையின் முதல் லீக் சுற்றை தாண்டுவீர்களா என்று பாகிஸ்தானை விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் மிடில் ஆர்டர் நன்றாக இல்லை. ஒருவேளை தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்படத் தவறினால் மிடில் ஆர்டர் சரிந்து விடுகிறது. இந்த வழியில் உங்களால் உலக கோப்பைக்கு சென்று கோப்பையை வெல்ல முடியாது. சொல்லப்போனால் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடக்கூடாது என்று நான் நம்புகிறேன். இந்த அணியால் எனக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மிடில் ஆர்டரை வலுப்படுத்துமாறு பயிற்சியாளர் சக்லைன் முஷ்டக்கை நான் விமர்சித்திருந்தேன். ஆனால் யாருமே அதை காது கொடுத்து கேட்கவில்லை”

Shoaib Akhtar

“இருப்பினும் உலகக் கோப்பை மற்றும் அதன்பின் நடைபெறும் நியூசிலாந்து முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் இதிலிருந்து மீண்டெழுந்து கம்பேக் கொடுக்கும் என்று நம்புகிறேன். மேலும் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் இங்கேயே தடுமாறும் பாகிஸ்தான் அங்கு வெற்றி பெறுவது எளிதல்ல. எனவே இதற்கு முன் சில வீடியோக்களில் நான் விமர்சித்த கருத்துக்களை பார்த்து அவர்கள் தங்களுடைய மிடில் ஆர்டர் பேட்டிங்கை முன்னேற்றுவார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் பாபர் அசாம் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது” என்று கூறினார்.

நிலைமை இப்படி இருக்கும் நிலையில் விரைவில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று சில பயிற்சி போட்டிகளில் களமிறங்கும் பாகிஸ்தான் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான இந்தியாவைத் தன்னுடைய முதல் லீக் போட்டியில் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மறுபுறம் ஆசிய கோப்பையிலும் கடந்த வருடம் உலக கோப்பையிலும் பரிசளித்த தோல்விகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement