என்ன மனசுய்யா! அரசியலில் இருந்துகொண்டு ஐபிஎல் கோச் நியாயமா? – கம்பீர் அளித்த நெஞ்சை தொடும் பதில்

Gambhir
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கடந்த 2 மாதங்களாக பல எதிர்பாராத திரில்லர் திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த தொடரில் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான அணிகள் ஆரம்பத்திலேயே சந்தித்த தொடர் தோல்விகளால் நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை அதுவும் சொந்த மண்ணில் வென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அமைந்தது.

குஜராத்தைப் போலவே இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு வரை சென்று அசத்தியது. 7000+ கோடி என்ற பிரமாண்ட தொகையில் உருவாக்கப்பட்ட அந்த அணி 17 கோடி என்ற பெரிய தொகைக்கு நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்தது. அவர் தலைமையில் லீக் சுற்றில் அவ்வப்போது தடுமாறினாலும் பங்கேற்ற 14 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்து அந்த அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடம் பிடித்து முதல் வருடத்திலேயே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று சாதித்தது.

- Advertisement -

அரசியலும் ஆலோசகரும்:
அந்த அணிக்கு பேட்டிங்கில் கேஎல் ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா ஆகியோரைத் தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறியதும் அவேஷ் கான், மோசின் கான் போன்ற பவுலர்களுக்கு தவிர இதர பவுலர்கள் கைகொடுக்க தவறியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எப்படி இருந்தாலும் இந்த முதல் சீசனிலேயே அந்த அணி சோடை போகாமல் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு ஆலோசகராக செயல்பட்ட முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் கௌதம் கம்பீர் ஒரு முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

இந்தியா வென்ற 2007, 2011 ஆகிய உலக கோப்பைகளில் கருப்பு குதிரையாக செயல்பட்ட இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு 2012, 2014 ஆகிய வருடங்களில் கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரியவர். இந்தியாவுக்காக விளையாடி ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெற்றபின் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனாலும் இடையிடையே வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் ஐபிஎல் தொடரில் ஒரு பெரிய தொகைக்கு ஆலோசகராக செயல்படுவது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

- Advertisement -

மனதை தொடும் கம்பீர்:
அதிலும் அரசியலில் இருந்துகொண்டு விளையாட்டிலும் சம்பாதிக்கிறார் என்று கௌதம் கம்பீர் பற்றி நிறைய பேர் அரசல் புரசலாக பேசி வருகின்றனர். இது பற்றி இன்று ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கௌதம் கம்பீர் அளித்த நேரடி பதில் பின்வருமாறு. “ஒவ்வொரு மாதமும் 5000 ஏழை மக்கள் உணவு உண்பதற்காக ஒவ்வொரு மாதமும் எனக்கு 25 லட்சம் தேவைப்படுகிறது. அதற்காக எனக்கு வருடத்திற்கு 2.75 கோடி தேவைப்படுகிறது. அதனால் தான் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் ஆலோசகராகவும் பணிபுரிகிறேன். மேலும் ஒரு நூலகம் அமைப்பதற்கு 25 லட்சங்களை செலவு செய்து வருகிறேன்”

“இவை அனைத்தையும் என்னுடைய சொந்தப் பணத்தில் தான் செய்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் எடுப்பது கிடையாது. மேலும் அந்த நிதியை என்னுடைய சமயலறை உட்பட எந்த தனிப்பட்ட அம்சத்திற்கும் பயன்படுத்துவதில்லை. அதே போல் என்னுடைய வீட்டில் பணம் காய்க்கும் மரமும் இல்லை. அதன் காரணமாக இது போன்ற வேலைகளில் ஈடுபடும் என்னால் 5000 மக்களுக்கு உணவு அல்லது ஒரு நூலகம் அமைப்பது போன்ற பணிகளை செய்ய முடிகிறது. அதற்காக ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்வதையோ அல்லது வேலை செய்வதையோ நான் அவமானமாக கருதவில்லை. இவை அனைத்தையும் ஒரு உயர்ந்த பணிக்காக செய்கிறேன்” என்று தெரிவித்தது பல ரசிகர்களின் நெஞ்சங்களைக் தொட்டது.

- Advertisement -

டெல்லியில் உள்ள காந்தி நகரில் “ஜன் ரசோய்” என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் கவுதம் கம்பீர் ஏழை மக்களுக்காக அதில் வெறும் 1 ரூபாய் என்ற குறைந்த விலையில் தினம்தோறும் சுமார் 5,000 பேரின் பசியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அவங்க 2 பேரை கழட்டி விட்டது சரியான முடிவு – பிராட் ஹாக் ஓபன்டாக்

அதேபோல் ஏழை மக்களுக்காக நூலகம் அமைப்பது போன்ற பணிகளுக்காக பாராளுமன்ற நிதியில் ஒதுக்கப்படும் தொகை பற்றாக்குறையாக இருப்பதால் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் பயிற்சியாளராகவும் செயல்படுவதாக தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் அந்த உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காக இந்த வேலையை செய்வதை அவமானமாக நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் என்ன மனுசன்யா என்பதுபோல் பாராட்டி வருகின்றனர்.

Advertisement