இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியானது நேற்று 4 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதன்படி நேற்று டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்திய அணி சார்பாக தீபக் ஹூடா 104 ரன்களையும், சஞ்சு சாம்சன் 77 ரன்களையும் குவித்து அசத்தினர். சூரியகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியாவும் தங்களது பங்கிற்கு சற்று அதிரடியை காட்டினார்கள்.
அதன் பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கினை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியானது இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் சென்று நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.
எட்டவே முடியாத இமாலய இலக்காக இருந்தாலும் அயர்லாந்து அணி இவ்வளவு தூரம் போராடி 221 ரன்கள் குவித்தது பாராட்ட வேண்டிய ஒரு விடயம் தான். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசியாக ஹர்டிக் பாண்டியா கடைசி ஓவரை கஉம்ரான் மாலிக்கிடம் வழங்கியது ஏன் என்பது குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் எந்த நேரத்திலும் நான் பிரஷரை உணரக்கூடாது என்று எனது திட்டத்தில் மட்டும் கவனமாய் இருந்தேன்.
இறுதி ஓவரை உம்ரான் மாலிக்கிற்கு வழங்க வேண்டும் என்று முன்கூட்டியே நினைத்தேன். அதே போல கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்கிற நிலையில் நிச்சயம் உம்ரான் மாலிக்கால் வெற்றி பெற வைக்க முடியும் என்று நினைத்தேன். அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது அவரது வேகத்தில் ஒரு ஓவரில் 17 ரன்கள் குவிப்பது என்பது மிகவும் கடினம். அதன் காரணமாகவே அவருக்கு அந்த கடைசி வாய்ப்பினை வழங்கியதாக கூறினார்.
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் அவுட்டில் ஈடுபட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் – சுவாரசிய பட்டியல் இதோ
மேலும் தொடர்ந்து பேசி அவர் : இந்த போட்டியில் அயர்லாந்து வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருந்தாலும் இறுதியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.