2023 புத்தாண்டில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி 2024 டி20 உலக கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 7ஆம் தேதியன்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 228/5 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய 3வது சதமடித்து 7 பவுண்டரி 9 சிக்ஸருடன் 112* (51) ரன்கள் விளாச சுப்மன் கில் 46 (36), ராகுல் திரிபாதி 35 (16), அக்சர் படேல் 21* (9) என இதர பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர். அதைத்தொடர்ந்து 229 ரன்களை துரத்திய இலங்கை ஆரம்பம் முதலே அனலாக பந்து வீசிய இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 16.4 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சனாகா மற்றும் குசால் மெண்டிஸ் தலா 23 ரன்களை எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
சுயநலமற்ற திரிபாதி:
இந்த வெற்றிக்கு அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக இலங்கை எப்படி பந்து வீசினாலும் விக்கெட் கீப்பருக்கு பின் திசை உட்பட மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கிய அவரது பேட்டிங்கை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். அதனால் ராகுல் திரிபாதியின் ஆட்டம் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே இசான் கிசான் 1 ரன்னில் அவுட்டானதும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் வழக்கம் போல தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
Loved his attitude. Got a chance after a long time, failed in 1st knock, not sure when the next opportunity will be. Still he showed a lot of intent and did not think of his place, played an unselfish knock. He provided the momentum bef SKY took over 👌#RahulTripathi pic.twitter.com/UIno8VYP7s
— AmarBharat (@jrsbk) January 8, 2023
அதனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் இந்தியா தடுமாறிய வேளையில் களமிறங்கிய ராகுல் திரிபாதி கொஞ்சமும் பயமின்றி அதிரடியாக 5 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (16) ரன்களை 218.75 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு மிக விரைவாக 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த அவரது அதிரடி ஆட்டத்தாலேயே பவர் பிளே முடிவில் 52/2 ரன்களை எடுத்த இந்தியா சரிவிலிருந்து மீண்டெழுந்தது. அதை பயன்படுத்தியே அடுத்து வந்த சூரியகுமார் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கி வெற்றி பெற வைத்தார்.
இருப்பினும் அந்த சமயத்தில் அவர் நினைத்திருந்தால் சுயநலமாக விளையாடி அரை சதமடித்திருக்கலாம். ஏனெனில் கடந்த பல வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடுமையாக போராடி பல மாதங்களாக பெஞ்சில் காத்திருந்த ராகுல் திரிபாதி ஒரு வழியாக 30 வயதில் இத்தொடரின் 2வது போட்டியில் தான் அறிமுகமானார். ஆனால் அறிமுக போட்டியில் வெறும் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்த அவர் இப்போட்டியில் பெரிய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
அப்படிப்பட்ட தன்னுடைய கேரியரை நிர்ணயிக்கும் இக்கட்டான சூழ்நிலையில் ஸ்கோரை பற்றி கவலைப்படாமல் பவுண்டரிகளை விளாசிய அவர் இந்தியா சரிவிலிருந்து மீண்டெழுந்து அற்புதமான தொடக்கத்தை பெற உதவி சுயநலமின்றி ஆட்டமிழந்தார். அந்த வகையில் 35 ரன்னில் அவுட்டான அவருக்கு அடுத்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணிக்காக தனது கேரியரை பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி விளையாடிய அவரை ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.
இதையும் படிங்க: ஏபிடி, கிறிஸ் கெயிலையே மிஞ்சிட்டாரு, இவரை மாதிரி டி20 விளையாட யாராலும் முடியாது – பாராட்டிய டேனிஷ் கனேரியா
அவருடைய ஆட்டத்தின் அருமையை உணர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியின் முடிவில் பாராட்டியதும் பின்வருமாறு. “ராகுல் திரிபாதியை இந்த இடத்தில் ஸ்பெஷலாக குறிப்பிட்டு பாராட்டுகிறேன். ஏனெனில் ஆரம்ப கட்ட ஓவரில் பந்தில் ஏதோ சவாலை கொடுக்கும் ஒன்று இருந்தது. ஆனால் அதை முறியடித்த அவர் அதிரடியாக விளையாடினார்” என்று கூறினார்.