
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. அப்போட்டியில் வென்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பேட்டிங் துறையில் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சனை விளையாட வைக்கலாம் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஏனெனில் 2016 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் சென்னையில் சேவாக்கிற்கு பின் இந்தியாவுக்கு முச்சதத்தை அடித்து சாதனை படைத்தார். அதன் பின் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.
இருப்பினும் மனம் தளராத கருண் நாயர் உள்ளூர் மற்றும் கவுண்டி தொடரில் போராடி 8 வருடங்கள் கழித்து தேர்வானார். அந்த வாய்ப்பில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரட்டை சதத்தை அடித்த அவர் முதல் போட்டியில் மிடில் ஆடரில் களமிறங்கி பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் சாய் சுதர்சனை அறிமுகப்படுத்தியுடன் கழற்றி விட்ட இந்திய அணி அவருக்கு 3வது இடத்தில் வாய்ப்பு கொடுத்தது.
அந்த வாய்ப்பிலும் அரை சதத்தை கூட அடிக்காத நாயர் 3வது போட்டியில் பந்தை தவறாக படித்து விக்கெட்டை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. இந்நிலையில் 8 வருடங்கள் கழித்து கடுமையாக போராடி வந்துள்ள கருண் நாயர் 3 போட்டியுடன் நீக்கும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை என்று ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஆம் கருண் நிறைய ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் அவருக்கு நீங்கள் வாய்ப்பளித்தால் சிறிது காலமாவது தொடர்ச்சியாக வாய்ப்பளிக்க வேண்டும். அனைத்து வீரர்களும் நியாயமான வாய்ப்புகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். கடந்த காலங்களில் கேஎல் ராகுல், சுப்மன் கில் தகுதியான ஆதரவைப் பெற்றதைப் போல தற்போது கருண் நாயர் வாய்ப்புகளைப் பெறுவதற்கு தகுதியானவர்”
இதையும் படிங்க: 4வது டெஸ்ட் நடைபெறும் மான்செஸ்டர் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“எனவே அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் 5 – 6 வாய்ப்புகளைப் பெறும் போது உடனடியாக நீக்கும் அளவுக்கு கருண் நாயர் மட்டும் என்ன தவறு செய்து விட்டார்? அதே போல சாய் சுதர்சனுக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுத்தது நியாயமானதாக எனக்குத் தெரியவில்லை. அவரை விட்டுவிட்டு நீங்கள் கருண் நாயரை நீங்கள் விளையாட வைத்தீர்கள். தற்போது அவரையாவது கொஞ்ச காலம் விளையாட வையுங்கள்” என்று கூறினார்.