இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கடந்த பல ஆண்டுகளாக ஹார்டிக் பாண்டியா விளையாடி வருகிறார். பேட்டிங்கில் சிறப்பாக பங்காற்றி வந்தாலும் இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹார்திக் பாண்டியா பந்து வீசாமல் இருந்து வருகிறார். அதோடு தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரிலும் அவர் பந்து வீசாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்திய அணி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த வேகப்பந்து ஆல்-ரவுண்டராக கொல்கத்தா அணியின் இளம் வீரர் வருவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கொல்கத்தா அணியின் இளம் வீரரான வெங்கடேச ஐயர் பவுலிங்கில் இன்னும் பெரிய அளவில் அவரது திறனை வெளிக் காட்டவில்லை.
இருந்தாலும் அவரது யார்க்கர்களை பேட்ஸ்மேன்களால் விளையாட முடியவில்லை. மேலும் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடுகிறார். எனவே ஹார்டிக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப வெங்கடேஷ் ஐயரால் முடியும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 14-வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடாத வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்காக இரண்டாவது பாதியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.
இதுவரை 5 போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ள அவர் 193 ரன்களை குவித்துள்ளார். அதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இதுவரை 25 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை அவர் விளாசி உள்ளார். அதுமட்மின்றி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கு சரியான மாற்று வீரராக இவரே இருப்பார் என்று பலரும் கூறிவருகின்றனர்.
வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கில் தனது அதிரடியை காட்டுவது மட்டுமின்றி பந்துவீச்சிலும் பெரிதளவு கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் காரணமாகவே இவர் இந்தியாவின் அடுத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வருவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் கூட 67 ரன்களை விளாசிய அவர் ஒரு சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகள் என அட்டகாசமாக அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.